கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - நம் மரபணுவுக்கு பிடிக்காத உணவு!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - நம் மரபணுவுக்கு பிடிக்காத உணவு!
PUBLISHED ON : அக் 14, 2018

மார்பக, கர்ப்பப்பை வாய் புற்றுநோயை பின்னுக்குத் தள்ளி, வயிறு, உணவுக் குழாய், இரைப்பை, குடல், நுரையீரல், வாய், கழுத்துப் பகுதி புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
உடல் நலக் குறைவு வரும் சமயங்களில், வழக்கமாக ஆலோசனை பெறும், டாக்டரிடம் காட்டுவர். அவர் புற்றுநோயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் உறுதி செய்து கொள்ள, சில பரிசோதனைகளை செய்யச் சொல்வார்.
'ஒன்றும் இல்லாததற்கு எதற்கு இதை செய்ய வேண்டும்?' என்று அலட்சியமாக இருந்து விடுவர். பல நேரங்களில் புற்றுநோய், இரண்டாவது, மூன்றாவது நிலைக்கு வந்த பின், சிகிச்சைக்கு வருவதற்கு, இந்த ஆரம்ப கட்ட அலட்சியமே காரணம்.
வாழ்க்கை முறை மாற்றம், தவறான பழக்கமான சிகரெட், மெல்லும் தன்மையுள்ள பான் மசாலா போன்றவற்றை பயன்படுத்துவதால், நுரையீரல், வாய்ப் புற்று வருகிறது என்றால், புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உணவு பழக்க மாற்றத்தால், புற்றுநோய் எவ்வாறு வருகிறது என்பதை, புரிந்து கொள்ள வேண்டியதும் முக்கியம்.
சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றையும், ஆலோசித்தாலே இது புரியும். நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை குறைத்து, கொழுப்பு அதிகம் உள்ள உணவையே, நாம் சாப்பிடுகிறோம்.
சமைக்க பயன்படுத்தும் எண்ணெயும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இல்லாமல், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயே, அதிகம் வழக்கத்தில் உள்ளது.
அதிக கொழுப்பு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பதப்படுத்திய உணவுகள் போன்றவை, நம் ஜீரண மண்டலத்தின் தன்மைக்கு ஒத்து வராது. இயற்கையாகவே நம் மரபணுக்கள் அப்படித்தான் உள்ளது. நம் தட்ப வெப்ப நிலை, சீதோஷண நிலைக்கு ஏற்றவாறு தான், நம் மரபணுக்கள் இருக்க முடியும்.
இயல்பாகவே, நம் உடலில் சில செல்கள், அசாதாரணமாக இருக்கும். நோய் எதிர்ப்பு செல்கள், இதை அடையாளம் கண்டு, வெளியில் தள்ளி விடும். செல்கள் வெளியில் வர முடியாமல், அங்கேயே தங்குவதால், பல செல்களாக பெருகி, புற்றுநோய் வரலாம். நார்ச்சத்து குறைந்த உணவை சாப்பிட்டு, கழிவுகள் முழுமையாக வெளியில் வராமல் தங்கும் போது, மலச்சிக்கல் ஏற்பட்டு, புண்ணாகி, காலப்போக்கில் புற்றுநோயாக மாற வாய்ப்பு உள்ளது.
பெருங்குடல், மலக்குடலில் மரபியல் காரணங்களால் புற்றுநோய் வரலாம். உணவு விழுங்குவதில் சிரமம், உடல் எடை குறைவது, கறுப்பாக மலம் கழிப்பது, மலச்சிக்கல், சுகவீனம் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரை ஆலோசிப்பது பாதுகாப்பானது.
டாக்டர் எஸ்.சுரேஷ், புற்றுநோய் சிறப்பு மருத்துவர், சென்னை.
drsureshonco@gmail.com
