PUBLISHED ON : ஆக 17, 2016

என்னைப் பார்க்க வந்த கார்த்திகேயன், 'என் பொண்ணு செல்வி பிளஸ் 2 தேர்வு எழுத மாட்டேன்னு சொல்லி அடம் பிடிக்கிறா மேடம். அதுவும் இல்லாம ரொம்ப முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறாள். அவள் அம்மாவையே அடித்து விடுகிறாள். என்னால ஹேண்டில் பண்ண முடியல' என்றார்.
அவரிடம் மகளின் மொபைல் போன் எண்ணை வாங்கி, 'என்னை வந்து பார்க்கிறியாமா, கொஞ்சம் பேசணும்' என்றேன். அடுத்த நாளே வந்தாள். 'ஏன் எக்ஸ்சாம் எழுத மாட்டேன்னு சொன்னே?' என்றேன். பேசாமல் இருந்தாள். 'கையில் கிடைச்சதை வச்சி அம்மாவை அடிக்கிறியாமே?' என்றேன். அவ்வளவுதான். மெல்லிய குரல் உடைய, ஆமா அக்கா, நான் ஏன் இப்படி இருக்கேன்னு எனக்கே தெரியல' என்றாள். 16 வயது பெண் பேச்சில், இன்னும் குழந்தைத் தனம் மாறாமல் இருந்தாலும், தன் நடத்தை குறித்த வருத்தம் இருந்தது. கொஞ்ச நேரத்திலேயே அக்கா, அக்கா என்று என்னிடம் நெருக்கமாகி விட்டாள். எந்த பிரச்னை என்றாலும் உடல், மனம், சூழ்நிலை என்று, அனைத்தையும் சேர்த்து ஒருங்கிணைந்த பார்வையாகவே பார்ப்பேன். முதலில், இந்தப் பெண்ணிற்கு உடல்ரீதியாக நிறைய பிரச்னைகள் இருந்தன. மாதவிடாய் சுழற்சி சீராக இல்லை. இதனால் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் கோபம், பதற்றம் போன்ற, பல மனப் பிரச்னைகளை தந்திருக்கிறது. இன்னொரு விஷயம், குழந்தை பருவத்தில் இருந்தே, குடும்ப சூழல் ஆரோக்கியமாக இல்லை. இவள் ஒரே பெண் என்றாலும், ஆரம்பத்தில் பெற்றோருக்கு நிறைய பொருளாதார நெருக்கடிகள் இருந்துள்ளன. அதைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த நேரம் மொத்தமும் அம்மாவிற்கும், அப்பாவிற்கும் சண்டை, விவாதம். அதிலும் இவளின் அம்மா எதற்கெடுத்தாலும், அப்பாவை குறை சொல்லி, அந்தக் கோபத்தை இவள் மீது காட்ட, அம்மா மேல் பயங்கர வெறுப்பாக இருந்தாள். சில ஆண்டுகளில் நிதி நிலைமை சரியாகி விட்டது. அதன்பின் அப்பா வீட்டிற்கு தாமதமாகவே வருவார். இதற்கும் பெற்றோருக்கு சண்டை. 15 ஆண்டுகள் தொடர்ந்து சண்டை போட்டனரே தவிர, குழந்தைக்கு,
நம் அன்பு, அரவணைப்பு தேவை என்பதையே, இருவரும் மறந்து விட்டனர். ஒரு கட்டத்தில், வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேட ஆரம்பித்தாள். ஒரு பையனோடு நெருங்கி பழகினாள். சில மாதங்களில் அந்த உறவும் முறிந்துவிட, இந்தப் பெண்ணிற்கு தாழ்வு மனப்பான்மையும், சுய பச்சாதாபமும் வந்துவிட்டது. என்னிடம் கேட்டாள், 'அக்கா, நான் கலரா அழகா இருக்கேன். நல்லாப் படிக்கிறேன். அப்படியிருந்தும் ஏன் யாருக்குமே என்னை பிடிக்கலை?'
முதலில் மகப்பேறு மருத்துவரிடம் அனுப்பி, உடல் ரீதியான பிரச்னைக்கு தீர்வு காணச் செய்தேன். ஹார்மோன் பிரச்னை சரியாக ஆரம்பித்தவுடன் மனதிலும் நிறைய மாற்றங்கள். அதன்பின் மெதுவாகப் பேசினேன். தன்னிடம் குறை காண்பது, மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவது என்ற அம்மாவின் போக்கு தனக்கு எரிச்சல் தருவதாகச் சொன்னாள். முதலில் அவள் பெற்றோரிடம், அவர்கள் நடத்தையை மாற்றிக் கொள்ளச் சொன்னேன். பிளஸ் 2 தேர்வு எவ்வளவு முக்கியம் என்பது, இந்தக் காலத்து குழந்தைக்கு தெரியும். அப்படிப்பட்ட தேர்வையே எழுத மாட்டேன் என்று சொல்கிறாள் என்றால், உங்கள் நடத்தை, அவளை எந்த அளவு பாதித்து உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றேன். தங்கள் குழந்தையின் எதிர்காலம் முக்கியம் என்பதில் இருவருமே கவனமாக இருந்தனர். அதனால் நான் சொல்வதைப் புரிந்து கொண்டு, செல்விக்காக தங்களை மாற்றிக் கொண்டனர்.
பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் வாங்கி, இந்த ஆண்டு கல்லுாரியில் சேர்ந்திருக்கிறாள் செல்வி.
எஸ்.திவ்ய பிரபா, மனநல நிபுணர், 89394 04576.
