தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையில் புரட்சி

ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையில் புரட்சி

ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையில் புரட்சி


PUBLISHED ON : ஏப் 08, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரத்த அழுத்தம் எந்த கட்டத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சை இருக்கிறதென்றாலும், இந்த பாதிப்பை தெரிந்து கொண்ட உடனே, சிகிச்சை எடுத்துக் கொண்டால், பல தேவையற்ற விளைவுகளையும், சிக்கலையும் தவிர்க்கலாம். உலக மக்கள் தொகையில் பாதிபேர், ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 22 - 30 வயது நிரம்பியவர்களுக்குக் கூட, உயர் ரத்த அழுத்தம் இருப்பதை காணமுடிகிறது. குறிப்பாக, ஐ.டி., துறையிலுள்ள இளைஞர்கள், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதில், பெண்களும் அடங்குவர். கிடைத்த நேரத்தில், தகாத உணவு சாப்பிடும் பழக்கத்தால் இந்த நிலை.

இந்த ரத்த அழுத்த நோயின் விளைவுகள், வயது ஏற ஏற, அதிகமாகி கொண்டே வருகிறது. 'ஸ்டிரோக்' என்ற, மூளையில் ரத்த கட்டி ஏற்பட்டு, தலை சுற்றல், மயக்கம், உடலின் பாதி செயலிழப்பு, இதய ரத்த குழாய் அடைப்பினால் ஏற்படும் மாரடைப்பு, மார்புவலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, இதய வீக்கம், இதயச் செயலிழப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவை, உயர் ரத்த அழுத்தத்தின், தகாத விளைவுகள். இதனால், குடும்ப அமைதி இன்மை, பொருளாதார சீரழிவு, மருத்துவ செலவு போன்றவை ஏற்படுகின்றன. இந்த ரத்த அழுத்தத்தினால், ஸ்டிரோக் ஏற்பட்டு, பக்கவாதம் வந்து தடுமாறும் முதியோருக்கு, பராமரிப்புக்கான மருத்துவச் செலவு ஏற்படுகிறது. மேலும், இவர்களை கவனிக்க, தனிநபர் தேவை. இதனால், குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது. ஆக, முதியோர் வாழ்க்கை நரகமாகிறது. இந்த பாதிப்போடு, இதய நோயும் ஏற்பட்டு விட்டால், இந்த முதியவரை, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், பாரமாக கருதுகின்றனர். இன்றைய இளைய சமூகத்தினரிடையே, முதியோர், வீட்டின் மூலையில் கிடக்கும் குப்பை போல் ஆகின்றனர்.


1ஏன் உயர் ரத்த அழுத்தம் குறைவதில்லை?

நவீன வாழ்க்கையின் வேகத்தில், பரபரப்பான நிலையற்ற வேலை, ஊதிய பற்றாக்குறை, ஆகியவற்றால், மன அழுத்தம், அடிக்கடி ஓய்வில்லாமல் பிரயாணம் செய்வது, சரியாக மருந்து, மாத்திரைகள் சாப்பிடாமல் இருப்பது, ஆகிய காரணங்களால், ரத்த அழுத்தம் குறையாத நிலை ஏற்படுகிறது. தனி மனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்காதது தான், இதற்கு காரணம். உடற்பயிற்சி, நடைபயிற்சி, கடுமையான உணவு கட்டுப்பாடு இல்லாததும், முக்கிய காரணம்.

2சிக்கலான உயர் ரத்த அழுத்தத்தை எப்படி கண்டறிவது?

பல ஆண்டுகளாக இருக்கும் ரத்த அழுத்தம், மேற்கூறிய காரணங்களால், மருந்துகளால் குறைக்க முடியாத நிலை ஏற்பட்டு, சிக்கலாகி விடுகிறது. ஒரு மாத்திரையின் அளவை, இரண்டு, மூன்று, நான்கு என்று கூட்டிய பிறகும், ரத்த அழுத்தம் குறைந்து, 130 / 90க்குள் வரவில்லை எனில், இது, சிக்கலான உயர் ரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. விருதாசலத்திலிருந்து வரும், 58 வயதுள்ள என் நோயாளி ஒருவருக்கு, ரத்த அழுத்தம், 180/140க்கு குறைவதில்லை. இவருக்கு, எல்லாவித மருந்து மாத்திரைகள் கொடுத்தும் பலனில்லை. ஆஞ்சியோ கிராம் செய்யும் போது, மருந்து உள்ளே செலுத்திய நேரத்தில் மட்டும், ரத்த அழுத்தம் குறைந்தது. அதன் பின், அழுத்தம் பழையபடி, 'எகிறி' விட்டது.

3ரத்த அழுத்தத்தில் சிறுநீரக பங்கு என்ன?

சில சமயங்களில், சிறுநீரகத்தில் ரெனின் என்ற, நொதி வெளி வருகிறது. இது, ராஸ் என்ற செயல்முறையை தூண்டுகிறது. இதனால், மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தை இயக்கி, ரத்த நாளத்தை சுருங்க வைத்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த ரத்தநாள சுருக்கத்தினால் ஏற்படும் பின்விளைவு தான், ரத்த அழுத்தம். ஆக, முக்கிய காரணி சிறுநீரகத்தின் ரத்த நாளத்திலுள்ள, சிம்பதிட்டிக் நரம்புகள் தான். இதன் இயக்கத்தால் தான், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு, 'ரீனல் நெர்வ்


டீனெர்வேஷன்' என்ற சிகிச்சை முறை.

4'ரீனல் நெர்வ் டீனெர்வேஷன்' இந்தியாவுக்கு வருமா?

முடியாது. காரணம், இந்த முறைக்கு செலவு அதிகம். அரசும் இதை அறிமுகப்படுத்த, ஏகப்பட்ட செலவாகும். இந்தியாவிலுள்ள கார்ப்பரேட், டிரஸ்ட் மருத்துவமனைகளுக்கு இது வர முடியும். இந்த சிகிச்சைமுறை, ஆய்வுகளில் உள்ளது.

இந்த சிகிச்சையின் பலன், எப்படி, எத்தனை நாள் இருக்கும், திரும்பவும் உயர் ரத்த அழுத்தம் வருமா, நரம்பு உயிர் பெற்று எழுந்து, ரத்த அழுத்தம் மீண்டும் திரும்புமா என்பது போன்ற, ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் இல்லை!

பொறுத்திருந்து பார்ப்போம்.

'ரீனல் நெர்வ் டீனெர்வேஷன்' சிகிச்சை முறை

இது, 2011ல், பாரீசில் நடந்த, ஐரோப்பிய இதய நோய் கழகத்து ஆண்டு மாநாட்டு துவக்க உரையாக இருந்தது. சிறுநீரகத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளத்தின் உட்சுவரில், இந்த 'ரீனல்' நரம்புகள், வேர்கள் போல் படர்ந்திருக்கும். இந்த நரம்புகளின் இயக்கத்தால் தான், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இந்த நரம்புகளை செயல் இழக்க செய்ய வேண்டும்.

எப்படி?

தொடைவழியாக, ரத்த குழாய் மூலம், ஒரு பிளாஸ்டிக் குழாயை உள்நோக்கி ஊடுருவி, சிறுநீரக ரத்த நாளத்தினுள் குழாயை செலுத்தி, இந்த சிகிச்சை முறைக்கு என, தயார் செய்யப்பட்ட கத்தீட்டரையும், உட்செலுத்த வேண்டும். குழாயின் முனையில், ஆர்.எப்., தகடு இருக்கும். இதை, ரீனல் ரத்த நாளத்தின் உட்பகுதியில் செலுத்தி, ஆர்.எப்., மெல்லிய பாட்டரி மூலம் இயக்க வேண்டும். இந்த அதிர்வு அலைகளால், நுண் நரம்புகள் துண்டிக்கப்பட்டு செயலிழக்கின்றன. இதனால், ரத்த அழுத்தம் குறைகிறது.

பேராசிரியர் சு. அர்த்தநாரி

டாக்டர் எஸ்.ஏ., ஹார்ட் கிளினிக்

221, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 14.

இ-மெயில்: drarthanarisubbu54@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us