PUBLISHED ON : ஜன 08, 2017

பருவமாற்றங்கள் துவங்கினாலே காய்ச்சல், இருமல், சளி என்பது இயல்பான ஒன்று. இதுபோன்ற சிக்கலில் குழந்தைகளே எளிதாக பாதிக்கப்படுவர். அதிலும், காய்ச்சல், சளி ஏதும் இல்லாமல் வறட்டு இருமல் குழந்தைகளை பாடாய்படுத்தும். நன்றாக ஓடியாடி விளையாடும் குழந்தைகள், இரவு முழுவதும் வறட்டு இருமலால் தூங்க முடியாமல் அவதிப்படுவர்.
இதுபோன்ற வறட்டு இருமலுக்கு மருத்துவர்களின் டானிக், மருந்துகளை காட்டிலும் கை மருத்துவத்தை முயற்சிசெய்வதே நல்லது. வறட்டு இருமலை
வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டு விரட்டலாம். வறட்டு இருமலுக்கு கொள்ளுப்பொடி, மிளகு, சுக்கு, பூண்டு கஷாயம் மருந்து கொள்ளுப்
பயிறு, 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் மிளகு, சுக்கு, பூண்டு சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு வாணலியில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு இந்த கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை இரண்டு நாட்கள், நாளுக்கு இரு வேளை குடித்தாலே போதும், வறட்டு இருமல் மட்டுமின்றி எந்த விதமான இருமலும் காணாமல் போகும்.
எலுமிச்சை, தேன் மருத்துவம்: பொதுவாக இருமல் ஜலதோஷம் அதிகம் உள்ளவர்கள் வைட்டமின் சி அதிகமாக உட்கொள்ள வேண்டும். காரணம் வைட்டமின் சி சளியை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. எலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இளஞ்சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல், அதன் காரணமான சளி காணாமல் போகும்.
இஞ்சி, தேன் மருந்து: அரை விரல் அளவுக்கு இஞ்சியை எடுத்து, அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொண்டு, ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி, இந்த கலவையை, ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வர, வறட்டு இருமல் குணமாகும்.
உலர் திராட்சை மருந்து: குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் ஓர் உணவு உலர் திராட்சை. 50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்து, அதனுடன், 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கிளற வேண்டும். பின், கலவையை தினமும் சாப்பிட்டு வர, வறட்டு இருமல் குணமாகும். வறட்டு இருமல் குழந்தைகளுக்கு வந்திருந்தால், மருந்தை தாரளமாக கொடுக்கலாம்.
புதினா மருந்து: வறட்டு இருமலுக்கு வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்து. புதினாவை துவையலாகவோ சூப் செய்தோ
சேர்த்துக் கொள்வதால் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.
மாதுளம், தேன், இஞ்சி மருந்து: மாதுளம் பழ முத்துக்களை மட்டும் எடுத்து, பழச்சாறு ஆக்கி கொள்ள வேண்டும். மாதுளம் பழசாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து அருந்தினால், வறட்டு இருமல் குணமாகும்.
திப்பிலி, தேன் மருந்து: நாட்டு மருந்து கடைகளில், திப்பிலி கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் குணமாகும்.
வெங்காயம், சர்க்கரை மருந்து: சின்ன வெங்காயம், 150 கிராம் எடுத்து, அதை நீர் விட்டு, நன்கு அரைத்து சிறு துணியில் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன், 150 கிராம் சர்க்கரை சேர்த்து பாகுபதமாக காய்ச்ச வேண்டும். இந்த பாகினை மூன்று வேளையும் பருகி வர, வறட்டு இருமல் காணாமல் போகும்.

