PUBLISHED ON : ஜூலை 10, 2016

ஏராளமான மருத்துவ முறைகள், நம் உணவு முறையிலேயே இருக்கின்றன. அவற்றை தரம் பிரித்து உண்டு வந்தால், நோயின்றி ஆரோக்கியமாக வாழ வழி கிடைக்கும். என்றும் இளமையுடன் வாழ தினம் ஒரு நெல்லிக்கனி. இருதயம் ஆரோக்கியமாக இருக்க, நோய் தாக்குதல் இன்றி வாழ செம்பருத்திப்பூ நல்லது.
மூட்டு வலியை போக்க, முடக்கத்தான் கீரையும், இருமல், மூக்கடைப்பு போக்க கற்பூரவல்லியும் நல்லது. வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்க மணத்தக்காளி கீரையும், உடலை பொன்னிறமாக மாற்ற, பொன்னாங்கண்ணி கீரையும் சிறந்தது.
ரத்தத்தை சுத்தமாக்க அருகம்புல், மூளை வலிமைக்கு பப்பாளி பழமும் ஏற்றது. நீரிழிவு நோயை குணமாக்க, முள்ளங்கியும், வில்வமும், வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக்கீரையும், ரத்த அழுத்தத்தை குணமாக்க துளசியும் சிறந்த மருந்து.
மார்பு சளி நீங்க சுண்டைக்காயும், சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடையும், ஞாபகசக்தியை கொடுக்க, வல்லாரை கீரையும், ரத்த அழுத்தத்தை குணமாக்க பசலைக்கீரையும் ஏற்றது.
ரத்தசோகையை நீங்க பீட்ரூட்டும், ஜீரண சக்தியை அதிகப்படுத்த, அன்னாசி பழமும், முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கையும், முள் முருங்கையும் நல்லது.
மார்புசளி, இருமலை குணமாக்குவதற்கு, தூதுவளையை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும். முகம் அழகுபெற, திராட்சை பழமும், அஜீரணத்தை போக்க புதினா, மஞ்சள் காமாலை விரட்ட கீழா நெல்லி, சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்க, வாழைத்தண்டும், சிறந்த மருத்துவ முறைகளாக உள்ளன.
எனவே, இதுபோன்ற வாழ்வியல் நடைமுறைகளை கையாண்டு, உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளப் பழகினால், நாளடைவில் சுறுசுறுப்புக்கு வழி வகுக்கும்.
