தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அலோபதி - குடல் புற்றுநோயும் கொலாஸ்டமி அறுவை சிகிச்சையும்

அலோபதி - குடல் புற்றுநோயும் கொலாஸ்டமி அறுவை சிகிச்சையும்

அலோபதி - குடல் புற்றுநோயும் கொலாஸ்டமி அறுவை சிகிச்சையும்


PUBLISHED ON : மார் 25, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மலக்குடல் மற்றும் பெருங்குடலில், புற்றுநோயோ மற்ற பாதிப்புகளோ ஏற்பட்டு, அறுவை சிகிச்சை மூலம், செயற்கை மலப்பையை உடலுக்கு வெளியே பொருத்துவதை, நோயாளிகள் அருவருப்பாக கருதி, இச்சிகிச்சைக்கே உட்படாமல், மிக மோசமான நிலைக்கு, ஏன் மரணத்திற்கே கூட தள்ளப்படுகின்றனர்.

ஆனால், இன்றைய மருத்துவ விஞ்ஞான தொழில்நுட்பத்தால், மேற்படி பிரச்னை, கிட்டத்தட்ட பெருமளவு குறைக்கப்பட்டு விட்டது என்கிறார், ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையின், 'கேஸ்ட்ரோ என்ட்ராலஜி' துறை தலைவர், டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன். இனி அவர்...



1. கொலாஸ்டமி எந்த இடத்தில் செய்யப்படுகிறது?


பொதுவாக, இரண்டு விதமான கொலாஸ்டமி செய்யப்படுகிறது. ஒன்று, 'ட்ரான்ஸ்வர்ஸ் கொலாஸ்டமி!' இது, வயிற்றின் மேல் பாகத்தில் வலதுபுறம் செய்யப்படுகிறது. மற்றொன்று, அடிவயிற்றின் இடது பாகத்தில் பெருங்குடலின் கடைசி பாகமான சிக்மாய்டு கோலனில் செய்யப்படும், சிக்மாய்டு கொலாஸ்டமி. மிகவும் அரிதான அடிவயிற்றின் வலதுபுறம், பெருங்குடல் ஆரம்பிக்கும் இடமான இலியம் பகுதியில் செய்யப்படுவது, இலியாஸ்டமி.

2. கொலாஸ்டமி எந்தெந்த பிரச்னைகளுக்காக தேவைப்படுகிறது?

மலக்குடல் புற்றுநோயால், இயற்கையாக ஆசனவாய் வழியாக மலம் கழிக்க முடியாத போது, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செய்யப்படுகிறது. புற்றுநோய் தவிர, குடலில் ஏற்படும் நீடித்த அழற்சியினாலும் (அல்சரேட்டிவ் கோலைட்டிஸ்), விபத்து போன்றவற்றால் காயம் ஏற்படுவதினாலும் கூட, மலக்குடலும், ஆசனவாயும் பாதிக்கப்படுவதால் கொலாஸ்டமி தேவைப்படுகிறது. இதைத்தவிர, குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாட்டினால், மலக்குடல் பகுதிகளில் பாதிப்பு இருந்தாலும், கொலாஸ்டமி தேவைப்படுகிறது.

3. கொலாஸ்டமி அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகள் யாவை?

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, மலக்குடல் புற்றுநோயினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அதற்கு ஒரே தீர்வு, கட்டியை அகற்றிவிட்டு, நிரந்தரமாக, 'கொலாஸ்டமி பேக்' பொருத்தப்பட வேண்டும் என்பதே. தொழில்நுட்ப வளர்ச்சியால், புற்று நோயைப் பற்றிய விளக்கமும், அதற்கு தேவைப்படும் சிகிச்சை முறைகளும் சாதகமாக உள்ளன. புற்றுநோய் கட்டியின் அளவு, அது பரவியுள்ள இடத்தின் அகல நீளம், அதனுடன் இணைந்த நிணநீர் சுரப்பியின் பாதிப்பு எவ்வளவு, உடலின் வேறு பாகங்களுக்கு அது பரவியுள்ளதா போன்ற விவரங்களை, மிகத் துல்லியமாக தெரிந்து கொள்ள, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்.ஆர்.ஐ., 'சிடி' ஸ்கேன் மற்றும் பெட் சிடி ஸ்கேன் என்று, மேலும் மேலும் நுண்மையாகி வருகிறது மருத்துவ தொழில்நுட்பம். எனவே, புற்றுநோய் கட்டியை முழுமையாக அகற்றிவிட முடிகிறது. கட்டியை அகற்றியபின், குடலின் இரண்டு முனைகளையும் இணைக்க, முன்பு கைகளால் தையல் போடப்பட்டது. இதனால், சில நேரங்களில் தையல் விட்டுப் போவதும், புண் சீக்கிரம் ஆறாமல் போவதும் ஏற்படலாம் என்பதால், தற்காலிகமாக கொலாஸ்டமி செய்யப்பட்டது.

தற்போது, இரண்டு பகுதிகளை ஒரே சீராக, தேவைக்கேற்ப நெருக்கமாக தையலிட்டு இணைப்பதற்கான, 'ஸ்டேப்ளர்' கருவிகள் உபயோகப் படுத்தப்படுகின்றன. இதனால், தையல் விடுபடும் அபாயம் இல்லாததால், தற்காலிக, 'கொலாஸ்டமி'யே கூட தேவைப்படாமல் போகலாம்.

ஒரு வேளை, கட்டி மிகப் பெரிதாய் இருந்தால், கீமோதெரபி, ரேடியேஷன் தெரபி (கதிர்வீச்சு) மூலம், கட்டியின் அளவை குறைத்து விட்டு, பின்பு அறுவை சிகிச்சையில் கட்டியை அகற்றிவிட்டு, இரண்டு முனைகளும் இணைக்கப்படுகின்றன.

கீமோ, ரேடியேஷன் தெரபி கொடுக்கும்போது, ஸ்டேப்ளர் தையல் பிரிந்து விடலாம் என்பதால், புண் ஆறும் வரை, மலம் அவ்வழியே செல்வதை நிறுத்த வேண்டி, தற்காலிக கொலாஸ்டமி செய்யப்படுகிறது.

இன்னும் வரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us