PUBLISHED ON : அக் 23, 2016

நன்றாக பேசிக் கொண்டிருப்போம். திடீரென எங்கிருந்து தான் வருகிறதோ, தெரியவில்லை கோபம். சற்று நேரத்தில், நாம் பார்த்த முகம், கோபம் வந்தால், நமக்கே பார்க்கத் தோன்றாது. வீட்டில் மனைவியிடம், குழந்தைகளிடம், அலுவலகத்தில் ஊழியர்களிடம் நாம் காண்பிக்கும் கோபம், உறவுப் பாலத்துக்கு வேட்டு வைக்கும்.எதையும் யோசிக்காமல், மனதை காயப்படுத்தும் வார்த்தைகளை விடும் போது, மற்றவர்கள் அதிகம் பாதிக்கக்கூடும். இதை கட்டுப்படுத்தக் கூடிய சில வழிமுறைகள் உள்ளன.
தீர்மானம் எடுக்கலாம்
சடார்... சடார்... என்று பொத்துக் கொண்டு வருகிறதா கோபம். அப்படி என்றால், உங்களை மாற்றிக் கொள்வதற்கான நேரம் வந்து விட்டது என்று அர்த்தம். சில மாதங்களுக்கும், படிப்படியாக, கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது, எந்தளவுக்கு முன்னேறி இருக்கிறீர்கள் என்று, பட்டியல் போட்டு கொள்ளுங்கள்.
சில சமயங்களில், கோபத்தை அடக்க முடியாமல் போய் விடலாம். அது போன்ற சமயத்தில், என்ன நடந்தது, கோபத்தில் எப்படி நடந்துக் கொண்டீர்கள், இப்படி நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும் என்பதை எல்லாம், எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கோபம் வந்தாலும், சில சமயங்களில், பொறுமை காத்திருப்பீர்கள். அப்போது, உங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும். அதையும், மறக்காமல் குறித்து வையுங்கள்.
பேசுவதற்கு முன்...!
யாராவது உங்களை கோபப்படுத்தினார்கள் என்றால், எதையும் யோசிக்காமல் பேசி விட வேண்டாம். உதிர்த்து விட்ட வார்த்தைகளை, மீண்டும் எடுத்து விட முடியாது. நிதானமான பேசுவது, ஒரு கலை என்பதை, நினைவில் கொள்க. கோபப்படுத்தினால், நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். சிறிது நேரத்தில், கோபம் குறைந்து விடும்.
ஏதாவது பிரச்னை வரும்போது, உங்களை பற்றி மட்டுமே நீங்கள் யோசிக்கிறீர்கள். அதனால், உங்களுக்கு கோபம் வந்திருக்கலாம். அந்த சமயத்தில், மற்றவர்கள் குறித்தும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நம்மை கோபப்படுத்தும் இடத்திலிருந்து விலகி செல்லலாம். வாக்குவாதம் துவங்கும் போது, சிறிது நேரத்தில் கோபமும் வெடித்து விடும். மிகவும் முக்கியமானது, நடந்த செயல்களை நினைத்து, நினைத்து அசை போட்டுக் கொண்டிருந்தால், கோபம் இன்னமும் அதிகமாகும்; உடல் நலம் பாதிக்கப்படும்.
நன்றாக இருந்த உறவுகள் கூட, கோபத்தால் விரிசல் விட்டிருக்கின்றன. கோபம் வரும் போது, நாம் என்ன பேசுகிறோம் என்று நமக்கே தெரிவதில்லை. தேவையற்ற வார்த்தைகளை விடும் போது, சில பழைய விஷயங்களை கிளற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். கோபம் அடங்கினாலும், இத்தனை நாள், இந்த விஷயத்தை மனதில் வைத்திருந்தீர்களா? என்று, மனைவி கேட்டால், அதற்கான விடை நம்மிடம் இருக்காது.
குழந்தைகளிடம் கோபம் காண்பிக்கும் போது, தொடர்ந்து அவர்கள் நம்மிடையே பேசுவதற்கு தயங்குவர். இதற்கு பின், நாம் என்னதான் அவர்களிடம்
அன்பாக இருந்தாலும், சற்று இடைவெளியை கடைபிடிக்கவே, குழந்தைகள் விரும்புவர்; காரணம், எந்த நேரத்தில் கோபப்படுவார் என்று தெரியாது என்பது,
பலரின் எண்ணமாக இருக்கும். ஒரு சின்ன விஷயத்தை பூதாகரமாக வெடிக்கச் செய்வதும், அதை அணைத்து விடுவதும் நம்முடைய கையில் இருக்கிறது. செல்லக் கோபமாக இருந்தால், குடும்பத்துக்கு கட்டாயம் அவசியம்.
