PUBLISHED ON : அக் 23, 2016

மனதுக்குள் வருத்தம் வந்தால், தம் அடித்து ஆற்றி விடலாம் என்பவர்கள், பல ரகம். அப்போது வருத்தம் போன உணர்வு ஏற்படும். சில மணி நேரங்கள் கழித்து, மீண்டும் வாசம் செய்கிறதே, என்ன செய்ய...?
நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டும், பீடியும் உங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகைப் பிடிப்பதால், ஆயுளின் எட்டு நிமிடங்கள், உங்களுக்கு குறைந்து கொண்டிருக்கிறது. இதமான சுற்றுச்சூழலுக்கு இதுவே ஆபத்தை விளைவிக்கிறது என்பதை, எப்போதாவது சிந்தித்தது உண்டா. அப்படி சிந்தித்திருந்தால், புகைப்பிடிக்கும் பழக்கத்தை, அறவே விட்டிருப்பீர்கள்.
புகைப் பழக்கம், இதயத்தை எரித்துக் கரியாக்கி கொண்டிருக்கிறது. உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு, நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொது இடங்களில் பிடிக்கும் புகையின் நெடி, பல மணி நேரம், அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பது தெரியுமா?
குழந்தைகள் பாதிக்கும்
புகைப்பிடித்து விட்டு, குழந்தைகளிடம் பேசும் போது, அது, அவர்களை பாதிக்கும் என்று, சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. உங்கள் மனைவி கூட விரும்பாமல், மனம் குமுறுவது, உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது. பல நேரங்களில், சிகரெட் துண்டுகளை அணைக்காமல் வீசி விட்டு செல்லும் போது, எத்தனை குடிசைகள் பாதிக்கப்படும் என்று, என்றாவது ஒரு நாள் அறிந்திருக்கிறீர்களா?
புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகி, ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள் மரணத்துக்கு உள்ளாகிறார்கள் என்பதை, எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? அப்படி சிந்தித்து இருந்தால், உடனடியாக அல்லாமல், கொஞ்சம், கொஞ்சமாக, புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட்டு இருப்பீர்கள்.
முதுமையில் பாதிப்பு
புகையிலுள்ள நச்சுப்பொருட்கள், உங்கள் ரத்தத்தோடு கலந்து, ரத்த நாளங்களை அடைக்கிறது. இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் அவஸ்தைப்படுவது, பல குடும்பங்களில் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டி சாக்கு சொல்பவர்களால், இந்த உலகத்தில் வேறு என்னதான் சாதிக்க முடியும்.
புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் சிகரெட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் பலமுறை சிந்திக்க வேண்டும்.
புகைப்பிடிப்பது நாகரீகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரீகம் என்ற உணர்வுக்கு வர வேண்டும். உலகில், முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தும், அதையெல்லாம் சட்டை செய்யாமல், புகைப்பிடிப்பது, நம் நலனுக்கு நாமே வைத்துக் கொள்ளும் வேட்டு.
புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல், சிறிது நேரம் சிந்தித்தால், புகை எனும் அரக்கனிடமிருந்து விடுதலை பெறலாம். முயற்சி செய்து கைகூடாத காரியங்கள் எதுவுமில்லை. நம்மிடம் இருந்து மாற்றம் வந்தாலே, பிறரை திருத்தக் கூடிய வாய்ப்பும் நமக்கு வரும். புகை இல்லாத சமூகத்தை உருவாக்க, ஒவ்வொரு மனிதரும் எண்ண வேண்டும்.
