PUBLISHED ON : அக் 23, 2016

சாம்பாரை தாளிக்க மட்டுமே சின்ன வெங்காயம் பயன்படுவதில்லை. உடல் நலனுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் இதில் அடங்கியுள்ளன. புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. இதை, இருதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை கரைக்கிறது.
குளவியோ, தேனீயோ கொட்டி விட்டால், கடித்த இடத்தில், வெங்காயத்தை தேய்த்தால் போதும்; இதிலுள்ள என்சைம், உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது; விஷத்தையும் முறித்து விடுகிறது.
சிறுநீரை அடக்குவோருக்கு, நோய் உபாதைகள் ஏற்படும். இப்பிரச்னை தீர, வெங்காயத்தை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் போதும்.
கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து, கழிவுகளை வெளியே தள்ளிவிடும்; இதனால், சிறுநீர் தாரை தொற்றும் குறையும். யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றலாம். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நாளடைவில் கற்கள் மறைத்து விடும்.
முதியவர்களுக்கு, மூட்டு வலி என்பது சகஜமாகி விட்டது. இதற்கு, வெங்காயத்தையும், கடுக எண்ணெயையும் சேர்த்து தடவினால், வலி குறையும்.
வெங்காயத்தில் இருக்கும் செலினியச் சத்து, கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும்.
காலநிலை மாற்றத்தால், நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் பலருக்கு இருக்கும். இதில் குணம் பெற, வெங்காய சாறில், தேன் கலந்து சாப்பிட்டால் போதும்.
புற்றுநோயை தடுக்கும் மருந்துப்பொருள், வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை, வெங்காயம் சரி செய்து விடுகிறது.
