PUBLISHED ON : அக் 23, 2016

தங்கள் கூந்தல் அழகை பராமரிக்க, பெண்கள் அதிகம் மெனக்மெடுகின்றனர். தலைமுடி பராமரிப்பதில், சில முக்கியமான விஷயங்கள் அடங்கியுள்ளன.
ஒவ்வொரு பெண்களுக்கும் தலைமுடி நீளமாக, அழகாக இருக்க வேண்டும் என்பது கனவு. தலைமுடி கொட்டுகிறதா? மென்மையாக இல்லாமல், வறண்டு காணப்படுகிறதா? உங்களுக்காகவே சில யோசனைகள்.
தற்போது, தொழில்நுட்ப நோக்கின், வேதியியலின் தலைநிமிர்வால், தலைமுடியை அலச, ஷேம்புகள் வந்து விட்டன. இதை தலையில் தேய்க்கும் போது, நேரடியாக அப்படியே உபயோகிக்காமல் இருக்க வேண்டும். திரவத்தை, தண்ணீருடன் நன்கு கலக்கி, அதன் பின் தான் தலையில் தேய்க்க வேண்டும். ஏனென்றால், அதிக வேதியியலின் தன்மையால், நேரடியாக தேய்க்கும் போது, முடி தனது வலுவை இழக்க நேரிடும். இதனால் தான், முடி கொட்டும் பிரச்னை உருவாகிறது.
பொருளாதார தேடலை நோக்கிய பாதையில் இருக்கும் மக்களுக்கு, ஓய்வு நாள் என்பது, வாரத்தில் ஒரு நாள் மட்டுமே. அப்போது, வேப்ப கொளுந்து மற்றும் சின்ன வெங்காயத்துடன் சேர்த்து நன்கு அரைத்து, தலை முழுவதும் முடியின் வேர்கள் படும் படி தேய்த்து, அரைமணி நேரம் கழித்து, குளிப்பது நல்லது. அதனால், தலையில் இருக்கும் பொடுகு, பூச்சிகள் உள்ளிட்டவை அழிந்து விடும். மேலும், உடலின் வெப்பத்தை குறைத்து, குளிர்ச்சியை தரும்.
விளக்கெண்ணையுடன், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கலந்து, தலைமுடி முழுவதும் நன்கு படும்படி தேய்த்து, ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் உலர வைத்து, பின்பு குளிக்க வேண்டும். இதனால், முடிக்கு கருமை அடைவதோடு, வேர்க்கால்களுக்கு பலம் கிடைக்கும்.
கடலை மாவு, முட்டையின் வெள்ளை கரு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து, தலைமுடியில் அப்ளை' செய்து, உலர வைத்து குளித்தால், முடி மென்மையாக மாறி, அழகாக காட்சியளிக்கும் என்பது மட்டும் உறுதி.
