
வாழை, காயாக, கனியாக இலையாக, நாராக பல வகையில் பயன்படுகிறது. வாழைக்காயில், பலவகை சத்துக்கள் இருப்பது தெரியும். ஆனால், அதிலுள்ள நோயை போக்கும் மருத்துவ குணம் பலருக்கு தெரிவதில்லை. வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும், சமையலுக்கு, மொந்தன் ரகம் மற்றும் நாட்டு வாழைக்காய்களை தான் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. மற்றவை பெரும்பாலும் கனிகாளாகத் தான் சாப்பிடுகின்றனர்.
மொந்தன் வாழைக்காயில், இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால், உடல் எடை கூடும்; உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன், மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. வாழைக்காயைச் சமைக்கும் போது, மேல் தோலை மெல்லியதாக சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பர். கேரளாவில், இப்பழக்கம் அதிகமாக உள்ளது.
வயிறு இரைச்சலுக்கு தீர்வு: துவையலாக செய்து சாப்பிடுவதால், ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடுவதால், வயிறு இரைச்சல்,
கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்துக்கு ஏற்றது தான் என்றாலும், மலத்தை இறுக்கி விடும். எனவே, குறைந்தளவே உட்கொள்வது நல்லது.
பச்சை வாழைக்காயை, சின்ன, சின்ன வில்லைகளாக நறுக்கி, வெயிலில் உலர்த்தி மாவாக்கி, உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும். வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, பத்திய உணவாக வாழைக் கச்சல் வழங்கப்படுகிறது. வாய்வு தொல்லை இருப்பவர்கள், இதை போதியளவு தவிர்க்க வேண்டும்.
கை, கால்களில் எரிச்சலா? வாழைப் பூவை நறுக்கி, சாறு எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடல் வலுவுக்கு நல்லது. வாழைப்பூக்கறி பித்தம், வாதம் உடலில் ரத்தக் குறைவு, வயிற்றில் பூச்சி முதலிய வியாதிகளுக்கு நல்லது. வாழைப்பூவை இடித்து சிற்றாமணக்கு எண்ணெய்யை விட்டு வதக்கி, கைகால் எரிச்சல் உள்ள இடத்தில் ஒற்றடமிட்டால், எரிச்சல் போகும்.
வாழைப்பூவை, வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாக பயணிக்கும். ரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளை கரைத்து, ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால், ரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனுடன் இருப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிக்கிறது. ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
பெண்களுக்கு சிறந்தது: மூலநோயின் பாதிப்பால், மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் ஆகியவற்றுக்கு, சிறந்த
மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றை குணப்படுத்தும்.
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு, அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு, வாழைப்பூவை உணவில் போதியளவு சேர்த்து வந்தால், இந்த உபாதைகள் நீங்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக, மூளை நரம்புகளில், சூட்டைத் தணித்து, மூளைக்கு புத்துணர்வை கொடுக்கும்.

