PUBLISHED ON : ஏப் 06, 2014

'ஆட்டிசம்' பாதித்தவர்களிடையே காணப்படும் வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டு, அவர்களுடைய தனித்திறன்களை ஊக்கப்படுத்துவதன் மூலம், அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற, நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம் என உறுதியேற்போம்!
தற்போது மக்கள் மத்தியில் தெரிந்த பெயராக இருந்த போதிலும், புரிந்துக் கொள்ளப்படாத விஷயங்களில், 'ஆட்டிசமும்' ஒன்று. தமிழில், இந்நோய் தாக்கியவர்களை, புற உலக சிந்தனை அற்றவர்கள் என்று அழைக்கிறோம். ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில், (0-2) நரம்பு மண்டலத்தில் ஏற்படக் கூடிய, சில வேறுபாடுகளின் தொகுப்பில் உருவானது தான், இந்த புற உலக சிந்தனை அற்ற நிலை. இவர்கள் பேசுவது, தவழ்வது, நடப்பது போன்ற வளர்ச்சி நிலைகளை, சராசரி குழந்தைகள் போல் எட்டும் தருணத்தில்
* தாயின் முகத்தை நோக்காமல் இருத்தல்
* மழலை பேச்சு தன்மையை இழத்தல்
* உணர்வுகளின் வேறுபாடுகளை வெளிப்படுத்தாமலிருப்பது
இத்தகைய மாற்றங்களால், இந்த குழந்தைகள், 3 வயதிலிருந்து, 5 வயதை எட்டும் போது, பின் வரும் துறைகளில் குறைபாடு உடையவர்களாக காணப்படுகின்றனர்.
* தகவல் பரிமாற்றம் (புரிதல், வெளிப்படுத்தல்)
* சமூக பரிமாற்றம்
* கற்பனை வெளிப்பாடு
காரணங்கள்: எத்தனையோ தொழில் நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும், மேற்கூறிய காரணங்களுக்கு, இன்று வரை நமக்கு, விடை கிடைக்கவில்லை.
இன்றைய ஆராய்ச்சியின் தகவல்கள்படி, புறஉலக சிந்தனை போக்கு, மரபு அணுக்கள் காரணமாகவோ, குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது பிறப்பதற்கு பின்போ, மூளை மற்றும் அதனுடைய பாகங்களின் தாக்கத்திற்கு காரணமாகவோ, இந்த குறைபாடு நிகழலாம். இதை பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. குழந்தையின் மனம் மற்றும் உணர்ச்சித் தாக்கங்கள், சுற்றுப்புறச் சூழ்நிலையின் காரணமாகவும், இந்த குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
இந்த புறஉலகத்து சிந்தனைப்போக்கு, இக்குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும், அவர்களுடைய சுற்றுச்சூழல் மற்றும் அவர்களுக்குக் கற்பிக்கப்படும். கல்வித் தன்மைக்கு ஏற்ப, கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ காணப்படும் அல்லது, மிதமாகவோ காணப்படும். உலக சுகாதார வல்லுனர்களின் கருத்துப்படி பிறக்கும், 88 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு, இந்த குறைபாடு இருக்க வாய்ப்புகள் உள்ளன. அதில், 54 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. இதன் சராசரி விகிதம் ஆண் 4:1 பெண் என்று கணக்கிடப்படுகிறது.
குணாதிசயங்கள்: நம் அனைவருக்கும் புலன் உணர்வுகள், 'கேட்டல், பார்த்தல், சுவைத்தல், தொடுதல், நுகர்தல்' போன்றவை ஒரு சரியான விகிதத்தில் அமைந்திருக்கும்.
ஆனால், இந்த குறைபாடு உடையவர்களுக்கு, அந்த சராசரி விகிதத்திலிருந்து அதிகமாகவோ அல்லது அதிலிருந்து குறைவாகவோ புலணுணர்வுகள் அமைந்திருக்கும். இந்த குழந்தைகள் வளர்ந்து வரும் காலத்தில், புலன் உணர்வுகளை சரியான விகிதத்தில் கொண்டு வருவதற்கு, சில செயல்பாடுகளில் ஈடுபடுவர்.
* கை விரல்களை ஆட்டுவது
* காதுகளை மூடிக்கொள்வது
* உடலை முன்பும், பின்பும் அசைப்பது
* சில வகையான சத்தங்களை எழுப்புவது
* ஓரிடத்தில் அமராமல் நடந்துக் கொண்டிருப்பது அல்லது குதிப்பது.
இவற்றை நாம் நடத்தை மாற்றங்கள் என்று கூறுகிறோம். இக்குழந்தைகள் பேச்சுத்திறன் முழுவதுமாக பாதிக்கப்பட்டோ அல்லது தகவல் பரிமாற்றத் திறனில்
குறைபாடுடையோர்களாகவோ இருப்பர்.
கற்பனை சக்தி பாதிப்பின் காரணமாக, தன்னை சுற்றியிருப்போரின் உணர்வுகளை மதிக்காதவர்களாகவும், புரிந்துக் கொள்ளாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.
* பேச்சுத்திறன் பாதிப்பால், இவர்களுடைய சமூக உறவு மனப்பான்மை பாதிக்கப்படுகிறது.
* குறுகிய சமூக உறவுகள் காரணமாக, சமூக நெறிமுறைகளை அறியாதவர்களாக உள்ளனர்.
* இவர்களுடைய சிறப்பான தனி நபர் தன்மை மற்ற குறைபாடுகளிலிருந்து இவர்களை தனித்துக் காட்டும்.
வழிமுறைகள்
* தனித்து விடாமல் குழுக்களில் இணைந்து கற்பித்தல்
* வீடு மற்றும் பள்ளி சூழலில் ஒருங்கிணைந்த ஒரே மாதிரியான தினசரி பாடத் திட்டங்கள் மற்றும் கட்டமைப்புடன் கூடிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்துதல்
* முன்பே அறிவிக்கப்பட்ட மாற்றங்களை, படிப்படியாக தினசரி வாழ்க்கையில் புகுத்துதல்
* படங்கள் அல்லது எழுதப்பட்ட அட்டவணைகளை பயன்படுத்தி, இவர்களின் தினத்தை ஒழுங்கமைத்தல்
* அவர்களுக்கு விருப்பமான செயல்களை, தடைகள் போடாமல் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் செய்ய அனுமதித்தல்
* அவர்களுடைய புலணுர்வு சார்ந்த நடத்தைகளை, சாதகமான மற்றும் அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய செயல்களில் ஈடுபடுத்துதல்
* சமூக விதிகளை ரத்தின சுருக்கமாக எடுத்து கூறுதல்
* ஒரு பொருளையோ அல்லது செயலையோ சிறிதளவு விளக்கிவிட்டு, பெரிதளவு அதை எப்படி அப்பொருளை கையாளுவது என்பதை செய்து காட்டல்
* உணர்வுகளை அறிந்து புரிந்து கொள்ளவும், அவற்றின் காரண காரியங்களை, எளிமையான முறையில் தெளிவாக விளக்குதல்
* வயது ஒத்தவர்களுடன் பள்ளி மற்றும் வீட்டுச் சூழலில் விளையாட உற்சாகப்படுத்துதல்
* உடற்பயிற்சிக்கு சம்பந்தமான நீச்சல், ஸ்கேட்டிங், குதிரையேற்றம், டேபிள் டென்னிஸ் போன்ற முறையான விளையாட்டுகளில் ஈடுபடுத்துதல்.
* இவர்களின் உணவுப் பழக்கங்கள் பற்றிய ஆராய்ச்சி இன்னும் ஒரு முடிவுக்கு எட்டவில்லை என்றாலும், கிடைத்த புள்ளி விவரங்களில் இருந்து இவர்களுடைய உணவு, பால், புரதச்சத்து மற்றும் குளூட்டன்கள் எனப்படும் கோதுமை அதை சார்ந்த உணவு வகைகள் போன்றவை, இக்குறைபாடு உள்ளவர்களின் உணவு செறித்தல் மண்டலத்தில் கடுமையான பாதிப்பை உண்டாக்குகின்றன. எனவே, இவற்றை சிறிது சிறிதாக குறைத்து, அவர்களது உணவு பழக்கங்களை மாற்றுவது நல்லது.
* பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்துதல்.
* இவர்களுக்கு தொழில்முறை பயிற்சி, பேச்சுப் பயிற்சி சிறப்புக் கல்வி, புலன்களை ஒருங்கிணைத்துப் பயிற்சிஅளித்தல் மிகவும் முக்கியமானதாகவும், இதுமட்டுமின்றி இசை மற்றும் ஓவியக்கலை பொழுதுபோக்காக இல்லாமல், அவர்களுடைய திறன்களை மேம்படுத்த ஒரு வடிகாலாக பயன்படுத்துதல்.
* எதிர்காலத்தில் அவர்களுடைய குமரப்பருவத்தில், அவரவர்களின் திறமைகளுக்கு ஏற்றவாறு, கல்லுாரியிலோ அல்லது பணியிடங்களிலோ அமர்த்துதல்.
முடிவுரை
சமுதாயத்தில் உள்ள மனித வேறுபாடு களில், இவர்களையும் ஒரு அங்கமாக கருதி, இவர்களுடைய அனைத்து மேம்பாட்டிற்காகவும் உதவுவது, நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். இவர்களிடையே காணப்படும் வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டு, அவர்களுடைய தனித்திறன்களை ஊக்கப்படுத்துவதன் மூலம், அவர்கள் வாழ்க்கையில் வெற்றிப் பெற நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம் என, உறுதியேற்போம்.
டாக்டர் எம். ஜிவா அழகண்ணன்,
ஒருங்கிணைப்பாளர்,
தி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆப் தமிழ்நாடு, தரமணி, சென்னை.
போன்: 94449 64207.

