PUBLISHED ON : டிச 29, 2020

குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெண்களுக்கு வரும் சிறுநீர் கசிவு பிரச்னை, பிரசவ நேரத்தில், வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், 30 வயதிலும் வரலாம். இந்தப் பிரசனைக்கு நவீன சிகிச்சை இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. தானாகவே சரியாகி விடும் என, பல பெண்கள் நினைக்கின்றனர். வெளியில் செல்ல தயங்கியும் அப்படியே விட்டு விடுகின்றனர்.
இருமல், தும்மல், சிரிக்கும் போது, குனியும் நேரத்தில், வேகமாக நடந்தால், சிறுநீர்க் கசிவு ஏற்படும். இதற்கு பயந்து, நிறைய பெண்கள், நடை, உடற்பயிற்சி செய்வதில்லை. சிறுநீர் கசிவின் தொடர்ச்சியாகவே பல பிரச்னைகள் பெண்களுக்கு வருகின்றன.
காரணங்கள்
பிரசவத்தின் போது, இடுப்பு தசை வலுவிழந்து விடும். பிரசவத்திற்கு பின், தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளை செய்யாமல் விடுவதால், வயது ஆக ஆக இடுப்பு பகுதி தசைகள் வலுவிழந்து போவதால், சிறுநீர் கசிவு ஏற்படலாம். இந்தப் பிரச்னை இருந்தால், தோல் தொற்று, சிறுநீரக தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். துர்நாற்றம் வீசும். இதனால், வீட்டிலும், வெளியிலும் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.
கட்டுப்பாடு இல்லாமல், சிறுநீர் கசிவது தெரிந்தால், உடனே டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். இடுப்பு தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் மூலமே, பிரச்னையை சரி செய்து விடலாம். பிரச்னை பெரிதான பின், உடற்பயிற்சி மட்டும் செய்வதால் பலன் இல்லை. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு வரும்.
இதனால், இரவில் துாக்கம் கெடுவதுடன், நீர்ச்சத்தும் குறையும். இதற்கு பயந்தே, தண்ணீர் குடிக்காமல் இருப்பர். இது தவறு. காபி, டீ, செயற்கை குளிர்பானம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். சிறுநீரில் ரத்தம் கலந்து போவது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். இது, கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம்.
டாக்டர் கே.கே.தென்றல்,
மகளிர் நல மருத்துவர்,
சென்னை.

