PUBLISHED ON : ஜூலை 13, 2025

பூ வியாபாரம் செய்யும் 52 வயது பெண்மணி எங்களின் கிளினிக்கிற்கு வந்தார். தன் பாதங்களிலும் உள்ளங் கைகளிலும் அடர்த்தியான கருமையும் சிவப்பும் கலந்த பிளவுகளும், விரிசல்களும் ஏற்பட்டு இருப்பதைக் காண்பித்தார்.
இதனால் பூக்களை கட்டுவதற்கும் தொடுப்பதற்கும் அந்த பெண்மணி சிரமப்பட்டார். கை, கால்களில் அரிப்பு, எரிச்சல் என்று எந்நேரமும் இருந்ததால், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று, கடந்த எட்டு ஆண்டுகளாக பலவித மருந்துகளை எடுத்துக் கொண்டதாகவும் அவை எந்த வித பலனையும் தரவில்லை என்றும் கூறினார்.
இப்பிரச்னையை ஆயுர்வேதத்தில் 'விபாதிகா' என்பார்கள்.
முதலில் கால்களில் தோல் வறட்சி ஏற்படும். பின் தோல் உரியும். அதன்பின் வெடிக்கும். இது உடலில் வாயு அதிகமாவதால் எற்படுகிறது. அத்துடன் சேர்த்து ஆழமான வெட்டுகளையும், ரத்தக் கசிவையும், எரிச்சலையும் ஏற்படுத்துகின்றது.
இதன் தொடர்ச்சியாக அரிப்பும் ஏற்படும்.
இப்பெண்மணிக்கு முதலில் கஷாயங்களைக் கொடுத்து ரத்தத்தை சுத்திகரித்தோம்.
பின் வெளிப்புறத்தில் மருந்துகள் தடவினோம். காய்ச்சப்பட்ட நெய் மருந்துகளை உட்கொள்ள செய்து வாயுவைக் குறைத்தோம்.வெளிப்பூச்சிற்கு தைலங்கள் கொடுத்தோம்.
ஆறு வாரங்களில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. நாள்பட்ட விபாதிகாவிற்கு பஞ்சகர்ம சிகிச்சை தேவைப்படலாம். இதில் சவாலான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட நபரின் தோல் ஆரோக்கியத்தை இயல்பாகப் பராமரிப்பது தான். குளிர் காலங்களில் ஒரு நாள் விடாமல் தினமும் எண்ணெய் தேய்ப்பது நல்ல பலனைத் தரும்.
நோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சையின் போது, புளிக்க வைத்த உணவுகள், உளுந்து, புளி, பச்சை மிளகாய், சுத்திகரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்ல பலனைத் தரும்.
சததௌத கி-ருதம், ஜாத்யாதி கிருதம் ஆகிய இரண்டு நெய் மருந்துகளும் வெளிப்பூச்சாக பயன்படுத்தும் போது நல்ல பலனை அளிக்கும். ஆழமான ரணங்களில் கடுக்காய் அரைத்து தடவுவது நல்ல பலனைத் தரும்.
ஆங்கில மருத்துவத்தில் விபாதிகாவை Chronic assured Eczema என்றும் psoriasis என்றும் எடுத்துக்கொண்டு மருந்துகள் தந்து சிகிச்சை செய்வர்.
டாக்டர் சுதீர் ஐயப்பன், டாக்டர் மீரா சுதீர், ஸ்ரீஹரியம் ஆயுர்வேதம், சென்னை86101 77899sreehareeyam.co.in