PUBLISHED ON : அக் 22, 2023

கேன்சர் எப்படி வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக மது, சிகரெட், பான் மசாலா போட்டால் வரும் என்று தான் நம் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இது உண்மை தான் என்றாலும், உணவு பொருட்களில் கலந்துள்ள கலப்படம் பிரதான காரணம்.
மெட்டபாலிசம் எனப்படும் இயல்பான உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டாலும், வெளிக்காரணிகளால் துாண்டப்படும் 'பிரீ ரேடிக்கல்ஸ்' எனப்படும் மூலக்கூறுகளாலும் உருவாகும். இதை சமன்படுத்துவதற்கான ஆன்டி ஆக்சிடென்டை செல்கள் உருவாக்கும்.
ஒரே எண்ணெயில் திரும்ப திரும்ப பொரிக்க, வறுக்க பயன்படுத்துவது; பார்பிக்யூ, ஷவர்மா என்ற பெயரில் உணவுகளை நேரடியாக தீயில் வாட்டி சாப்பிடும் போது, மாசு, தாதுக்கள், உணவில் உள்ள வேதிப்பொருட்கள், நிறமிகள், கலப்படம் எல்லாம் சேர்ந்து பிரீ ரேடிக்கல்சை உடம்பில் உருவாக்கும்.
மிதமான அளவில் பிரீ ரேடிக்கல்ஸ் இருந்தால், வெளியில் இருந்து உடலினுள் நுழையும் தேவையற்ற பொருளை எதிர்த்து போராட இவை உதவும். இதுவே அதிகமானால், கேன்சருக்கு காரணமாக அமைகிறது.
ஆன்டி ஆக்சிடென்ட் - பிரீ ரேடிக்கல்ஸ் இரண்டிற்கும் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டு, ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ் என்ற நிலை உருவாகும். இதில், செல்கள் சிதைந்து, அதன் அமைப்பில் மாற்றம் ஏற்படும். கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி இதனால் நடந்து, கேன்சர் செல்லாக மாறுகிறது.
பழங்கள், காய்கறிகளில் கேன்சர் செல்களை எதிர்த்து போராடக்கூடிய பைட்டோ கெமிக்கல்ஸ் எனப்படும் மருத்துவ குணம் இருக்கும். இயற்கை உணவுகளில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் உள்ளது.
அதீதமாக உடற்பயிற்சி செய்தால், லேக்டிக் அமிலம் உடம்பில் தங்கி, பிரீ ரேடிக்கில்சை அதிகப்படுத்தும்.
மன அமைதி மிகவும் முக்கியம்
தேனீ ஒலி எழுப்புவதை போன்ற பிராமரி பிராணயாமம் செய்யும் போது, மன அழுத்தத்தை நீக்கி, உடலில் உள்ள நைட்ரிக் ஆக்ஸ்சைடு நைட்ரேட்டாக மாற உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கி, சிதைந்த செல்களை எளிதாக சரி செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொரோனா காலத்தில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளுக்கு இந்த பயிற்சி கொடுத்ததில், நல்ல பலன் கிடைத்தது. தினமும் ஆறு, ஏழு முறை செய்யலாம். வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.
முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார வேண்டும். ஆள்காட்டி விரலால் காதுகளை மூடி, நாசிகளின் வழியாக மூச்சை உள்ளிழுத்து, மூச்சை வெளியில் விடும் போது, 'ம' என்ற சத்தத்துடன் விட வேண்டும். இதை செய்யும் போது, மூளையில் அதிர்வை ஏற்படுத்துகிறோம். இது நம்மையும் அறியாமல் மன அழுத்தத்தை நீக்குகிறது.
டாக்டர் ஒய்.தீபா,
இயற்கை மருத்துவர், சென்னை
