PUBLISHED ON : ஜன 25, 2020

முட்டை சாப்பிட்டால், குழந்தைகளுக்கு அலர்ஜி வருமா?
நிறைய பெற்றோர், இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கின்றனர். கடல் உணவுகள் சாப்பிட்டால், சில குழந்தைகளுக்கு, ஒவ்வாமை எனப்படும், அலர்ஜி வருவதைப் போலவே, முட்டை சாப்பிட்டாலும் வரலாம்.இது சராசரியாக, 2 சதவீத குழந்தைகளுக்கு இருக்கிறது. முட்டை அலர்ஜி இருக்கும் குழந்தைகளுக்கு, 16 வயது வரை இருக்கலாம். அதன்பின், உடல் உட்செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றத்தால், அலர்ஜி தானாகவே சரியாகி விடும்.
முட்டை அலர்ஜியை எப்படி கண்டுபிடிப்பது?ஒத்துக் கொள்ளாத உணவை சாப்பிடும் போது, உடம்பில் அரிப்பு வரும். ரத்த அழுத்தம் குறைந்து, தலை சுற்றலாம். வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இந்த அறிகுறிகள் இருந்தால், அலர்ஜி என்று தெரிந்து கொள்ளலாம்.முட்டை என்றில்லை, பொதுவாக எந்த ஓர் உணவை சாப்பிடும்போதும், இதுபோன்ற அறிகுறிகள் வந்தால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு விரைவாக டாக்டரிடம் செல்ல வேண்டும்.என்ன செய்வது என்று யோசித்து நேரத்தை வீணாக்குவது, நிறையப் பேர் செய்யும் தவறு. உணவு அலர்ஜி அரிதாக, உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.முட்டை அலர்ஜி என்று தெரிந்தவுடன், முட்டையே கொடுக்காமல் இருந்தால், குழந்தைக்கு எப்படி சத்து கிடைக்கும் என்று கேட்பர். முழுமையான வளர்ச்சிக்கு, முட்டை சாப்பிட வேண்டும் என்று சொல்லியே பழகி விட்டோம்.முட்டையில் இருப்பதை விடவும் அதிக சத்துக்கள், பச்சை காய்கறிகள், கீரைகள், சிறு தானியங்களில் உள்ளன. முட்டைக்கு மாற்று கோழிக்கறி, ஆட்டிறைச்சி என்று நினைப்பதும் தவறு.எல்லா வகையான கீரைகளிலும், கால்சியம், இரும்பு, தாதுக்கள், வைட்டமின் சத்துக்கள் உள்ளன. அதனால், இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும்.
டாக்டர் அஸ்வின் விஜய் \
பொதுநல மருத்துவர்
சென்னை.
90942 20777
