PUBLISHED ON : ஜன 25, 2020

சிறுநீரக தொற்றால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, சமீப ஆண்டுகளில், மிகவும் அதிகரித்து உள்ளது. இதற்கு, மிக முக்கிய காரணம், பள்ளிகள். கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்படாததே, பெரும்பாலான குழந்தைகள், பள்ளி கழிவறைகளை பயன்படுத்துவதற்கே தயங்குகின்றனர்.
இதனால், காலை முதல், மாலை வரை, சிறுநீர் கழிக்காமல், அடக்கி வைக்கின்றனர். நீண்ட நேரம், சிறுநீர் பையிலேயே இருப்பதால், தொற்று ஏற்படுவதோடு, சிறுநீர் பையில் உள்ள தசைகள் விரிவடைந்து, பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதற்காகவே, போதுமான அளவு தண்ணீரும், இவர்கள் குடிப்பது இல்லை. இதனால், நீர்ச்சத்து குறைந்து, பல உடல் கோளாறு வருகின்றன.சில குழந்தைகளுக்கு, சிறுநீர் பாதையில், தோல் மூடியிருக்கும். இது, பிறவியிலேயே ஏற்படும் பிரச்னை. அறிகுறிகள் இருக்காது என்பதால், வெளியில் தெரியாது. சிறுநீர் தொற்றுக்காக பரிசோதனை செய்யும் சமயத்தில் தான், கண்டுபிடிக்க முடியும்.
தோல் முழுமையாக சிறுநீர் பாதையில் மூடியிருந்தாலும், சிறுநீர் கழிப்பதில் பிரச்னை வராது. ஆனாலும், இதை அப்படியே விடுவது ஆபத்தானது. தோல் மூடி இருந்த இடத்தில் தொற்று இருந்தால், தோலை அகற்ற வேண்டும். பிரச்னை இல்லை என்றால் தேவையில்லை.சில குழந்தைகளுக்கு, சிறுநீர் பையில் நரம்பு கோளாறு இருக்கலாம். இதனால், சிறுநீரை முழுமையாக வெளியேற்ற முடியாது. இவர்களுக்கும், சிறுநீரக தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்.பிறந்த குழந்தைக்கும், சிறுநீரக தொற்று வரலாம். அறிகுறிகள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில குழந்தைகளுக்கு, தொடர்ந்து காய்ச்சல், வாந்தி, சோர்வு, விடாமல் அழுகை போன்ற அறிகுறிகள் தெரிந்தால், சிறுநீரக தொற்று இருக்கலாமோ என்ற சந்தேகம் வர வேண்டும்.
வளர்ந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். சிறுநீரில் துர்நாற்றம், சளி போன்று வருவது போன்றவையும், சிலருக்கு இருக்கும்.இரண்டு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு, வேறு எந்த அறிகுறியும் இல்லாமல், தொடர்ந்து, 101 டிகிரி செல்ஷியசுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், பெரும்பாலும் சிறுநீரக தொற்றின் அறிகுறியாக இருக்கும்.இதுபோன்ற சமயத்தில், காய்ச்சல், சளி அல்லது வேறு உடல் பிரச்னை என்று நினைத்து அவசரப்பட்டு, 'ஆன்டிபயாடிக்' மாத்திரைகளை கொடுக்கக் கூடாது.
காரணம், ஒன்றிரண்டு மாத்திரை கொடுத்தவுடன், சிறுநீர் வழியே, பாதிக்கும் மேல் கிருமிகள் வெளியில் வந்து விடும்.தொடர்ந்து காய்ச்சல் குறையாமல், அதன்பின், சிறுநீர் பரிசோதனை செய்தால், கிருமிகள் பாதிப்பு முழுமையாக தெரியாமல் போய்விடலாம்.மூன்று மாதங்களுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு, சிறுநீர் தொற்று வந்தால், ரத்தத்தில் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால், சிறுநீரகப் பரிசோனை செய்து, அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.ஒரு வயதிற்குள், ஆண் குழந்தைகளுக்கு தான், தொற்று அதிகம் ஏற்படும். அதற்கு மேல், பெண் குழந்தைகளுக்கு அதிகம் வரும்.
சிறுநீரக தொற்றுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
சிறுநீரில் தொற்று ஏற்பட்டால், சிறுநீரகங்களை பாதிக்கும். அடிபட்டால் ஏற்படும் காயம் ஆறியவுடன், ஒரு தழும்பாக மாறுவதைப் போல், சிறுநீரரில் ஏற்படும் தொற்று, சிறுநீரகங்களை பாதிக்கும் போது, அவற்றில் ஒரு தழும்பை ஏற்படுத்தும். இதனால், குறிப்பிட்ட வயதில், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகங்கள் செயலிழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, சிறுநீரக தொற்றுக்கு, முறையாக சிகிச்சை செய்ய வேண்டும்.மருந்து சாப்பிட ஆரம்பித்த, 48 - 72 மணி நேரத்தில், தொற்று காரணமாக ஏற்பட்ட காய்ச்சல் குறைந்து விடும். ஆனாலும், 10 - 15 நாட்கள், ஆன்டிபயாடிக் மருந்துகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும். சில பெற்றோர், காய்ச்சல் குறைந்ததும், மருந்து தருவதை நிறுத்தி விடுகின்றனர்; அப்படிச் செய்யக் கூடாது.முழுமையாக தொற்றை அழித்தால் தான், சிறுநீரகங்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படும். தொற்று ஏற்பட்டவுடன் தாமதிக்காமல், மாத்திரைகள் சாப்பிடுவதால், சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.
பாதிப்பை தவிர்க்க என்ன வழி?போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மூன்று மணி நேரத்தற்கு ஒரு முறை, சிறுநீர் கழிப்பது அவசியம்.பொதுவாக, சிறுநீரில் குறைந்த அளவில், கிருமிகள் இருக்கும். சிறுநீர் சேகரித்ததில் இருந்து, அரை மணி நேரத்திற்குள், பரிசோதனைக்கு தந்துவிட வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால், சிறுநீரில் இருக்கும் கிருமிகள் பெருகி விடும்; பரிசோதனை முடிவுகளில், தொற்றின் பாதிப்பு சரியாக தெரியாது.
டாக்டர் கே.தனலட்சுமி,
ஆலோசகர்,
காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, சென்னை. 044 -- 4200 1800, 4234 4949
