PUBLISHED ON : அக் 06, 2013
என் வயது, 66. மூட்டுவலி உள்ளது. இரண்டு நாள் ஓய்வெடுத்தால் சரியாகிறது. டாக்டரிடம் செல்ல, பயமாக உள்ளது. கால்வலிக்கு என்ன காரணம்?
உங்கள் மூட்டுவலிக்கு காரணம், மூட்டு தேய்மானம் ஆக இருக்கலாம். ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்பட்டால், சில சிகிச்சை முறையில், அது மோசமாவதை தடுக்கலாம். நவீன மருத்துவ உலகில் பல நோய்களுக்கு எளிமையான முறையில் சிகிச்சைகள் உள்ளன. நீங்கள் ஆலோசனை செய்யாமல் தாமதம் செய்தால், சில தீங்கு விளைவிக்கக் கூடிய நோய்களை, கண்டுபிடிக்க முடியாமலும், நடக்க முடியாமலும் போவதற்கு, வாய்ப்பு உண்டு.
என் வயது, 34. ஐந்து வார கர்ப்பிணி. எனக்கு, இரண்டு ஆண்டுகளாக தோள்பட்டை வலி உள்ளது. நுண்துளை சிகிச்சை செய்து கொள்ளப் போகிறேன். கர்ப்பம் ஆக இருக்கும்போது இதை செய்யலாமா?
பொதுவாக, கர்ப்பிணி பெண்கள், எவ்வித மருந்து வகைகளோ, சிகிச்சை முறைகளோ மேற்கொள்வதற்கு, மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே நல்லது. தோள்பட்டை சிகிச்சைக்கும், கர்ப்பத்திற்கும் நேரடி தொடர்பு இல்லையென்றாலும், அவசர சிகிச்சைகளை தவிர, மற்ற சிகிச்சைகள் குழந்தை பிறக்கும் வரை தாமதிப்பது நல்லது.
ஆனால், உங்கள் தோள்பட்டை வலி அதிகமாக இருந்தால் கண்டிப்பாக நுண்துளை சிகிச்சை செய்ய முடியும். தற்போதுள்ள தொழில்நுட்பத்தில், சிசுவுக்கு பிரச்னை வராமல் இருக்க தேவையான மருத்துவ ரீதியான, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, வெற்றிகரமாக செய்ய இயலும்.
என் வயது, 52. காலை எழுந்தவுடன், மூட்டுகளில் வலி, வீக்கம் உண்டாகிறது. பரிசோதனையில் எந்தக் குறையும் இல்லை. 'ஸ்டீரினோகேடிவ் ஆர்த்ரைட்டிஸ்' உள்ளது என்றனர். பிரீட்னிசலோன் என்ற மருந்தை எடுத்தபின் வலி குறைந்துள்ளது. இம்மருந்தை நீண்ட நாள் எடுக்கலாமா?
பிரீட்னிசலோன் என்ற மருந்து ஸ்டீராய்டு வகையை சேர்ந்தது. நீண்ட நாள் எடுப்பது நல்லதல்ல. உடல் உப்புவது, எதிர்ப்பு சக்தி குறைவது, தோல் வறண்டு காணப்படுவது, வயிற்றுப்புண் வருவது போன்ற பிரச்னைகள் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே இம்மருந்தை, டாக்டரின் மேற்பார்வையில் எடுப்பது நல்லது. தவிர்க்க முடியாத சில நோய்களை தவிர மற்ற நேரங்களில் நீண்ட நாட்கள் எடுப்பது கூடாது.
டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,
மதுரை.
