PUBLISHED ON : அக் 06, 2013

பிளீச்சிங் முறையில் பற்களில் படிந்துள்ள கறைகளை அகற்றலாம். பிளீச்சிங் சிகிச்சையை சரியான கால அவகாசத்தில், பல் மருத்துவர்களின் மேற்பார்வையில் செய்ய வேண்டும்.
எனக்கு சில மாதங்களாகவே பின், பற்களில் சில ஆடுகின்றன. பற்களை எடுக்காமல் இவற்றை சரிசெய்ய முடியுமா?
பற்கள் ஆடுவதற்கு முதல் காரணம், பற்களை சுற்றி உள்ள எலும்பு பலம் இல்லாமல் இருப்பது தான். பற்களுக்கு மேல் ஏற்படும் ஈறுநோய், நாளடைவில் அதைச் சுற்றியுள்ள எலும்பிலும் பரவி விடும். இக்கிருமிகளால் பற்களை சுற்றி உள்ள எலும்பு தேய்ந்து பற்களின் பிடிமானம் குறைந்து பற்கள் ஆட ஆரம்பிக்கும். ஆடும் பற்களை எல்லாம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஈறுகளை சுத்தம் செய்வது முதற்கட்டம். பின், ஈறுகளின் அடியில் சென்று, எலும்பின் மேல் உள்ள கிருமிகளை நீக்கிவிட வேண்டும். பின், அந்த இடத்தில், ஈறுகளின் அடியில், மருந்து வைத்து கட்டிவிட வேண்டும். ஓரிரு வாரங்களுக்கு ஒருமுறை, ஈறுகள் ஆறும்வரை கண்காணிக்க வேண்டும். இதன்மூலம் பற்களை சுற்றி உள்ள எலும்பு
பலப்பட்டு, ஈறுகளில் உள்ள கிருமிகள் நீங்கி, பற்கள் ஆடுவது குறையும்.
இச்சிகிச்சையோடு சேர்த்து, 'சப்ளின்டிங்' என்னும் முறையில் ஆடும் பற்களை, அதன் இருபக்கமும் உள்ள பற்களோடு மெல்லிய நூலினால் சேர்த்து கட்டிவிட வேண்டும். சில மாதங்கள் கழித்து இந்த நூலினை அகற்றிவிடலாம். அதற்குள் ஆடும் பற்கள் பலம் பெற்று குணமடைந்துவிடும்.
நான் அடிக்கடி காபி, டீ குடிக்கிறேன். இதனால் பற்களில் கறை ஏற்படுகிறது. இதற்கு என்ன சிகிச்சை உள்ளது?
பற்கள் நிறம் மாறுவதற்கு, அவற்றின் உள்ளிருந்து ஏற்படும், மாற்றங்கள் காரணம். ஆனால் காபி, டீயால் வரும் நிறமாற்றம், பற்களின் வெளிப்புறத்தில் ஏற்படும். இவற்றில் உள்ள, 'க்ரோமோஜென்' என்னும் ரசாயனம், பற்களின் எனாமல் மேல் படிவதால், பற்கள் மஞ்சள் மற்றும் பிரவுன் நிறத்தில் மாறும். அதோடு சேர்ந்து, இவற்றில் உள்ள அமிலத்தன்மை, பற்கள் சுலபமாக மங்கிப் போவதற்கு வழிவகுக்கிறது. இந்த மங்கிய நிறம், பற்களை பலமாக தேய்ப்பதன் மூலம் போகாது. பிளீச்சிங் முறையில் பற்களில் படிந்துள்ள கறைகளை அகற்றலாம்.
பிளீச்சிங் சிகிச்சையை சரியான கால அவகாசத்தில், பல் மருத்துவர்களின் மேற்பார்வையில் செய்ய வேண்டும். பிளீச்சிங் செய்து முடித்த பின், 'வெனியர்' என்றொரு சிகிச்சை செய்யலாம். இம்முறையில், இயற்கை பற்களின் நிறத்திலேயே தகடு போன்று பற்களில் ஒட்டி விடலாம்.
டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை.
1. இரவில் தூங்கும்போது நான் மூச்சுவிட சிரமப்படுவதாக, வீட்டில் உள்ளவர்கள் கூறுகின்றனர். மேலும் குறட்டை விடுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனை சரி செய்வது எப்படி?
குறட்டை என்பது, மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, நாம் வாய்வழியாக சுவாசிக்கும் போது, மேல் அண்ணத்தின் அதிர்வால் உருவாவது. இரவில் தூங்கும்போது குறட்டை சத்தம், கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து, முழுவதும் மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்பட்டு, குறட்டை சத்தம் நின்று விடும்.
அந்த நேரத்தில், நுரையீரலுக்கு காற்று செல்வதில்லை. அப்படி நுரையீரலுக்கு காற்று போகாத நேரத்தில் தான், உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதற்கு நீங்கள், 'ஸ்லீப் ஸ்டடி' என்னும் ஒரு பரிசோதனையை செய்ய வேண்டும். அதாவது, இரவு முழுவதும் நீங்கள் தூங்குவதை, கம்ப்யூட்டரில் பதிவு செய்வர். அந்தப் பரிசோதனையின் முடிவை வைத்து, உங்களுக்கு என்ன தொந்தரவு என்பதை கண்டறிய முடியும்.
2. என் கழுத்துப் பகுதியில் ஒருமாத காலமாக டி.பி., நெறி கட்டியுள்ளது. இதற்கு, 9 மாதம் மாத்திரை சாப்பிடும்படி மருத்துவர் கூறுகிறார். எனக்கு, 6 மாத குழந்தை உள்ளது. இந்நோய் அவனை பாதிக்குமா? தாய்ப்பால் கொடுக்கலாமா?
டி.பி., நுரையீரலில் இருந்தால் மட்டுமே, அது மற்றவர்களை பாதிக்க, வாய்ப்பு உள்ளது. நீங்கள் இருமுவதால் நோய்க்கிருமி, அருகில் உள்ளவர்களை பாதிக்கும். டி.பி., நெறிகட்டுதல், முதுகு தண்டு வட டி.பி., போன்ற, மற்ற வகை, டி.பி.,க்கள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை.
டி.பி., நுரையீரலில் இல்லாதபோது, நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. தாய்ப்பால் ஊட்டலாம்.
டாக்டர் எம். பழனியப்பன்,
மதுரை.
