PUBLISHED ON : நவ 24, 2013
சி.விஜயலட்சுமி, மதுரை: ஆறு மாத கர்ப்பிணியான என் மகளுக்கு தற்போது ரத்தக்கொதிப்பு உள்ளதாக டாக்டர் கூறுகிறார். அவர் மருந்து எடுக்கலாமா?
கர்ப்பிணி பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் வரும் தன்மை உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. கர்ப்பிணியாக இருக்கும்போது உயர்ரத்த அழுத்தம் ஏற்பட்டால் பிரசவ காலத்திற்குப் பின், அது தொடர வாய்ப்பு உள்ளது. ஆகவே மகப்பேறு டாக்டரை குறிப்பிட்ட இடைவெளியில் சந்தித்து, மருந்து பெற்று, ரத்தஅழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பது முக்கியம். கர்ப்பிணிப் பெண்களுக்கான உயர்ரத்த அழுத்த மருந்துகள், பிற ரத்த அழுத்த நோயாளிகளுக்கான மருந்துகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. குறிப்பாக, 'ஏஆர்பி' மற்றும் 'ஏசிஇஐ' போன்ற ரத்தக்கொதிப்பு மருந்துகளை அறவே தவிர்த்தாக வேண்டும்.
* பி.வேணுகோபால், திண்டுக்கல்: எனது வயது 50. ரத்தக்கொதிப்போ, சர்க்கரை நோயோ கிடையாது. தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்கிறேன். நன்கு பசிக்கிறது. அதிகமாக சாப்பிடுகிறேன். இது சரியா?
இந்தியர்களுக்கு வரும் ரத்தக்குழாய் நோய்களான மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்க சில வாழ்வியல் மாற்றங்களை செய்தாக வேண்டும். புகைப் பிடிப்பதை அறவே நிறுத்துவது முதன்மையானது. 35 வயது ஆனாலே, நாம் எடுக்கும் உணவை ஆரோக்கியமானதாக எடுப்பது நல்லது. இத்துடன் மனதை நிம்மதியாக வைப்பது முக்கியம். எடையை உயரத்துக்கேற்ப பராமரிப்பதும் முக்கியம். வாழ்வியல் மாற்றங்களை செய்தபின் சிலருக்கு சில மருந்துகளை கொடுத்தே ரத்தக்குழாய் நோய்களை தடுக்க இயலும்.
நீங்கள் உங்கள் உணவை அளவின்றி எடுப்பது தவறான பழக்கம். நம் உணவில் உப்பை நன்கு குறைத்து, சர்க்கரை, இனிப்பு வகைகளை அறவே தவிர்த்து, எண்ணெய்யை நன்கு குறைத்து எடுப்பது முக்கியம். காலையில் 3 இட்லி அல்லது எண்ணெய் இல்லாத 3 தோசைகள், மதியம் நிறைய காய்கறிகள் எடுத்துக் கொண்டு, அரிசி உணவை
குறைப்பது நல்லது. இரவில் எண்ணெய் இல்லாத 3 கோதுமை தோசை அல்லது 3 சப்பாத்திகள். நடுவில் பசித்தால் நிறைய பழங்கள் உண்பது நல்லது. நொறுக்குத் தீனி, பொரித்த பண்டங்களை தவிர்த்தாக வேண்டும். சரியான உணவுப் பழக்கம் அமைந்தால், இந்நோய்களை 30 சதவீதம் தடுக்க இயலும். உடலை பராமரிக்க உடற்பயிற்சி மட்டும் போதுமானது அல்ல. ஆரோக்கிய உணவுப் பழக்கமும் முக்கியம்.
* கே. சித்திரவேல், அருப்புக்கோட்டை: கடந்த 6 ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு நோய் உள்ளது. இதற்காக 'அம்லோடிபின் 5 மி.கி.,' (Amlodipine) மருந்தை தொடர்ந்து எடுக்கிறேன். இம்முறை டாக்டர், 'ஓல்மிசார்டான் 20 மி.கி.,' (Olmesartan) மருந்தைத் தந்துள்ளார். இதை தொடர்ந்து எடுக்கலாமா?
ரத்தக்கொதிப்புக்கு தற்போது நவீன மருந்துகள் வந்துள்ளன. ஓல்மிசார்டான் என்பது 'ஏஆர்பி' வகையைச் சேர்ந்த ரத்தக்கொதிப்பு மருந்தாகும். இது ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும். இதன் பக்கவிளைவுகளும் மிகக் குறைவு. சமீபத்தில் நடந்த மருத்துவ ஆய்வில் இம்மருந்து, ரத்தநாள அடைப்பை குறைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. சர்க்கரை நோய் உள்ள ரத்தக்கொதிப்பு நோயாளிக்கும் இது சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. நீங்கள் தொடர்ந்து இம்மருந்தை எடுக்கலாம்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452- 233 7344
