PUBLISHED ON : அக் 17, 2021

மார்பகத்தில் கட்டி அல்லது வேறு ஏதாவது கோளாறு இருந்தால், பிரச்னையின் தன்மையை அறிய, 'டயாக்னாஸ்டிக் மேமோகிராம்' செய்ய வேண்டியது அவசியம். பிரச்னை எதுவும் இல்லாமல், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று வருபவர்களுக்கு செய்யப்படுவது, 'ஸ்கிரீனிங் மேமோகிராம்!'
எந்த பிரச்னையும் இல்லாதபோது, 35 வயதிற்கு முன், மேமோகிராம் பரிசோதனையை செய்யக் கூடாது. காரணம், இதில் கதிர்வீச்சை உடலினுள் செலுத்தி பரிசோதிக்கிறோம். கதிர்வீச்சால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படலாம்.
நாற்பது வயதிற்கு மேல் இப்பரிசோதனையை, மரபியல் ரீதியில் மார்பக கேன்சர் வரும் வாய்ப்புகள் உள்ள பெண்கள் ஆண்டிற்கு ஒருமுறை செய்து கொள்ளலாம். மற்றவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யலாம். இந்த பரிசோதனையை நன்கு தேர்ச்சி பெற்ற பெண் தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமே செய்ய முடியும்.
பயிற்சி பெற்றவர்கள் உள்ள மையத்தில் இதை செய்து கொள்ளும் போது, பிரச்னை உள்ளதா, இல்லையா என்பதை சரியாக சொல்ல முடியும். அப்படி இல்லாதபட்சத்தில், இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருக்கிறது என்றும் தவறாக சொல்லிவிடும் அபாயம் உள்ளது.
மேமோகிராம் செய்வதால், கேன்சர் செல்கள் பரவும் என்பதும் தவறான அபிப்ராயம். மார்பகப் புற்று நோய், பாதித்தவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவக் கூடியது இல்லை.
ஆதாரம்: சென்னை பிரஸ்ட் சென்டர்

