PUBLISHED ON : அக் 24, 2021

மார்பக கேன்சர் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும், 'மேமோகிராம்' செய்வதற்கு அனைவரிடமும் தயக்கம் இருக்கிறது. மகளிர் கல்லுாரிகளில் மார்பக கேன்சர் பற்றிய விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து பேசுகிறேன். அங்குள்ள பேராசிரியர்களே, 'மேமோகிராம் என்றால் என்ன; பரிசோதனையின் போது அதிக வலி இருக்குமா?' என்று கேட்கின்றனர்.
கேன்சர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று முன்கூட்டியே பரிசோதனை செய்து, கவனமாக இருக்க வேண்டும் என்பதை விட, பெரும்பாலும் நமக்கு வராது என்ற எண்ணம் தான் இருக்கிறது. கேன்சர் வந்தால் முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றே நினைக்கின்றனர். அதிக செலவு, நேர விரயம், வலி இல்லாத 'எக்ஸ் - ரே' போன்றது தான் மேமோகிராம் பரிசோதனை.
மார்பக சுயபரிசோதனை செய்வது, கேன்சர் வரும் வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய, ஆரம்ப நிலையில் இருந்தால் கண்டறிய உதவுமே தவிர, மார்பக கேன்சர் வருவதைத் தடுக்காது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்தாலும், பரிசோதனை செய்து கொள்ள முன் வருவதில்லை.
டாக்டர்களே 40 வயதிற்கு மேற்பட்ட தங்கள் வீட்டுப் பெண்களை பரிசோதனை செய்ய அழைத்து வருவதில்லை. 10 ஆண்டுகளுக்கு முன், மார்பக கேன்சர் என்று வருபவர்கள் நோய் முற்றிய நிலையில் தான் வருவர். தற்போது நகர்ப்புறங்களில் ஆரம்ப நிலையில் வருவது அதிகரித்து உள்ளது. 'லாக் டவுன்' சமயத்தில் மருத்துவமனைக்கு செல்ல பயந்ததால், பிரச்னை முற்றிய நிலையில் வந்தனர்.
கேன்சர் தீவிரம், பரவும் விதம் நபருக்கு நபர் வேறுபடும். சிலருக்கு கேன்சர் செல் உருவான ஒரு மாதத்திலேயே நோய் முற்றி விடும்; சிலருக்கு முதல் நிலையிலேயே ஒரு ஆண்டு இருக்கலாம். டாக்டரிடம் சென்றால், கேன்சர் என்று மார்பகத்தை அகற்றி விடுவரோ என்ற பயத்திலேயே, பலர் வருவதில்லை. ஆரம்ப நிலையில் இருந்தால், மார்பகத்தை அகற்றத் தேவை இருக்காது; கட்டியை மட்டும் அகற்றி, தேவையான சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
காரணிகள்
இது தான் காரணி என்று உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. மரபணு காரணிகளால் கேன்சர் வருவது 10 சதவீதம் தான். பத்து வயதிற்கு முன், பருவம் அடையும் பெண்கள், 50 வயதிற்கு பின் தாமதமாக 'மெனோபாஸ்' அடைபவர்களுக்கு, 'ஈஸ்ட்ரோஜன்' ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும்.
உடல் பருமன் இருந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு ஈஸ்ட்ரோஜென்னாக மாறும். இந்த ஹார்மோன் தாக்கம் நீண்ட காலத்திற்கு இருக்கும். எனவே, இவர்களுக்கு மார்பக கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம்.
குழந்தை பெற்ற அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதவிடாய் வராது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது, மார்பக கேன்சர் வருவதை தடுக்கும் விஷயங்கள்.
டாக்டர் கே.அன்பரசி,
புற்று நோய் சிறப்பு மருத்துவ ஆலோசகர்,
சென்னை.
74027 23404
