PUBLISHED ON : நவ 27, 2016

மலம், ஜலம் சிக்கலின்றி நீங்கினால் நோய்கள் உடலை அண்டாது. கழிவுகள் உடலுக்குள் தேங்கினால் வயிறு குப்பை தொட்டியாக மாறிவிடும். இதில் கவனமாக இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகிறது.
மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து, சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும். காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு, வாய்வு சீற்றமாகி, மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது.
இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள், துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.
துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து ரசமாக அருந்தி வந்தால், உடல் சூடு தணியும். துத்தியிலையை எடுத்து ஆமணக்கு எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து, கட்டி வந்தால், கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும். துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும். துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், குடல் புண் ஆறும். சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை ரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.
துத்திக் கீரைகளில் கருந்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் இருக்கின்றன. அனைத்து வகை துத்தியும் ஒரே மாதிரியான மருத்துவ குணம் பெற்றுள்ளது. துத்திக் கீரை உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு பயிராகும். மொத்தம் 20 வகையான துத்தி இனங்கள் உள்ளன. துத்திக் கீரையின் இலை, பூ, காய், முதலிய பாகங்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
துத்திக் கீரை சிறுநீரைப் பெருக்கும், மலத்தை இளக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும். இக்கீரை குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் தன்மை கொண்டது.
உடலுக்கு ஊட்டமளிப்பதால் நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டாக்கிப் பல நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. மூலநோய், கட்டிகள், புண்கள், முழுமையாக நிவாரணம் பெறுகின்றன. எலும்பு முறிவுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. துத்திக் கீரையை உணவில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மற்ற கீரைகளைக் கடைவது போல துத்திக் கீரையையும் பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து, கடைந்து சாப்பிடலாம். துத்திக்கீரையைத் தினமும் ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் எந்தப் பிணியும் அணுகாது. தேவையான சக்தியும் கிடைத்து விடுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள், உடல் சூடு உள்ளவர்கள், ஆசனத்தில் கடுப்பு உள்ளவர்கள், மேகச் சூடு உள்ளவர்கள் துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதால் நிவாரணம் அடையலாம்.

