PUBLISHED ON : அக் 09, 2022

பசித்து சாப்பிடுவதை விட, ஆசைக்காக சாப்பிடுவதே அதிகம். இப்படி தேவை இல்லாமல் சாப்பிட ஆரம்பித்து, உடல் பருமன் பிரச்னையாக மாறி விட்டது. இதில் வருத்தமான விஷயம், கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, குழந்தைகளையும் உடல் பருமனாக்கி விட்டது தான்.
இது நல்லது, அது நல்லது என்று தேர்வு செய்து சாப்பிட்டாலும், நோய் பாதிப்பு குறையவில்லை; அதிகரித்தபடியே இருக்கிறது. காரணம், செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளாமல், உணவை தேர்வு செய்வதில் பலன் இல்லை.
நம் முன்னோர் நம்மைப் போல தேர்வு செய்து சாப்பிடவில்லை; உடம்பின் தேவையை அறிந்து சாப்பிட்டனர். பசி, தாகம், துாக்கம் போன்ற இயற்கையான, இயல்பான உணர்வுகள், உடம்பு நம்மோடு தொடர்பு கொள்ளும் தகவல் தொடர்பு அம்சங்கள்; இந்த தகவல் தொடர்பை உணர்வதே இல்லை.
தாகம் எடுக்கிறதா, இல்லையா என்று தெரியாமலேயே, ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்கின்றனர்; மூன்று வேளை சாப்பிடுவதை ஆறு வேளை சாப்பிட ஆராய்ச்சிகள் சொல்கின்றன என்று கணக்கெடுத்து, அலாரம் வைத்து சாப்பிடுகிறோம்.
தண்ணீர் குடிக்கும் நேரம், துாங்கும் நேரத்தை மொபைல் போனில் உள்ள 'ஆப்' நினைவுபடுத்துகிறது. இயற்கையான உடல் உணர்வுகளில் இருந்து விலகி, ஒரு 'பீப்' சத்தம் வந்ததும், தண்ணீர் குடிக்கிறோம்; துாங்கப் போகிறோம். இயற்கையான உடல் உணர்வுகளில் இருந்து விலகி விட்டோம். உங்கள் உடம்பு என்ன சொல்கிறது என்று உணர்வதே இல்லை.
அமிர்தத்தையே சாப்பிட்டாலும், செரிமான அக்னி ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உணவு நஞ்சாகி விடும். எல்லா நோய்களுக்கும் அது தான் அடிப்படை.
செரிமானத்திற்கு தேவை பித்தம்; இதை அக்னி என்று சொல்வோம். அக்னிக்கு ஆதாரமான சூரியன், மேலே வர வர நன்கு பசிக்கும். காலையில் இருந்து சாப்பிடாமல் காத்திருந்து பார்த்தால், இது புரியும். சூரியன் மேலே வர வர பசி உணர்வு அதிகமாகும். மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன் நன்கு பசிக்கும்; சூரியன் மறைந்த பின், பசி உணர்வு குறைந்து விடும்.
பகலில் நன்கு பசி உணர்வு வரும் நேரங்களில், சாப்பிட வேண்டும். இரவில் கூழ், கஞ்சி, பழரசம், சூப் போன்ற திரவ உணவுகளை சாப்பிட வேண்டும்.
உடம்பு என்ன சொல்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இயந்திரம் போல, ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் தண்ணீர், இந்த நேரத்தில் எல்லாம் சாப்பிட வேண்டும் என்று சாப்பிட்டால், ஒரு கட்டத்தில் உடலால் செயல்பட முடியாமல் போகும்.
டாக்டர் ரேச்சல் ரேபேகா பிலிப்
ஆயுர்வேத மருத்துவர், சென்னை
94895 50936
