PUBLISHED ON : நவ 24, 2019

இருமல் ஏன் வருகிறது?
உதரவிதானம், மார்பு, வயிற்று சதைகள் ஒன்றாக சேர்ந்து நெஞ்சுக்கூட்டில் அழுத்தத்தை அதிகமாக்கி காற்றை நொடிப்பொழுதில் வெளியேற்றும் ஒரு செயல்தான் இருமல். தொண்டைப்பகுதி, மூச்சுக்குழாயில் இருமலை துண்டும் நரம்பு முடிச்சுகள் உள்ளன. அலர்ஜி (புகை, துாசி, அடர் நெடி, ஆஸ்துமா), கிருமித்தொற்று (வைரஸ், பாக்டீரியா, டிபி, பூஞ்சை காளான்), தொண்டை மற்றும் மூச்சுக்குழாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகளின் போது அந்த நரம்பு முடிச்சுகள் துாண்டப்பட்டு இருமல் ஏற்படுகிறது.
இதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
சாதாரணமாக துவங்கும் இருமல் சில வேளையில் மயக்கத்தை ஏற்படுத்தும் அளவு தீவிரமாகும். இதை கட்டுப்படுத்தவில்லை எனில் தலைவலி, கண்களில் ரத்தக்கசிவு, மூளை ரத்தக்குழாய் வெடிப்பு, கண் லென்ஸ் விலகுதல், மார்பு எழும்பு முறிவு, வயிறு சதை நார் பாதிப்பு, குடல் இறக்கம் எனப்படும் ஹெர்னியா போன்ற கொடுமையான பாதிப்புக்கும் வழிகோலும். பெண்களுக்கு இருமும்போது சிறுநீர் கசிவும் ஏற்படுவதுண்டு.
இருமலுக்கான முக்கிய காரணிகள்?
* பொதுவாக ஜலதோஷம், அலர்ஜியினால் ஏற்படும் இருமலே அதிகம். ஜலதோஷ இருமல் முதலில் சளி இன்றி துவங்கி பின் சளி பாதிப்பு ஏற்படும். இது 5 முதல் 7 நாட்கள் வரை இருக்கலாம். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்ற பாதிப்பு இருக்கும்.
* ஆஸ்துமா இருமல் சளியின்றியோ, சளியுடனோ இருக்கலாம். குறிப்பிட்ட பருவகாலத்தில் (மழை, பனிக்காலம்) வரலாம். இளைப்பும் இருக்கலாம். அதிகாலையில் நெஞ்சு இறுக்கத்துடன் வரும் இருமலும் ஆஸ்துமாவாவின் அறிகுறியே.
* சிகரெட் புகைப்பவர்களுக்கு துவக்கத்தில் லேசான இருமல் இருக்கும். நாளடைவில் தினமும் காலையில் சளியுடன் கூடிய இருமல், சளியில் ரத்தம் வருதல் பாதிப்பு ஏற்படும். இது டிபியாகவோ, கேன்சராகவோ கூட மாறலாம்.
* படுத்தவுடன் வரும் இருமல் சைனஸ், உணவுக்குழாய், இருதய பிரச்னைகளில் ஒன்றாக இருக்கும்.
தீர்வு என்ன?
இது இருமல் பாதிப்பு ஏற்படும் காலம். இது சாதாரண பிரச்னையாக இருந்தாலும் கூட, கொடிய பாதிப்புகளின் அறிகுறியாகவும் உள்ளது என்பதை நினைவில் வைக்க வேண்டும். ஒரு வாரத்திற்கும் மேலாக இருமல் தொடர்ந்தால் நிச்சயம் டாக்டரை சந்தித்து முறையான பரிசோதனை, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் பாதிப்பை துவக்கத்திலேயே சரி செய்ய முடியும்.
- டாக்டர் பிரபாகரன்
நுரையீரல் நிபுணர், மதுரை.
98400 03404.
