PUBLISHED ON : ஜூலை 24, 2016
புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும், தானாக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும், மருத்துவ குணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த, இந்த எளிமையான காய்கறி, கொடியினத்தை சேர்ந்தது. இந்தியாவில் எங்கும் கிடைக்கும். கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாற்றை உலோகப் பொருட்களோடு கலந்து, நீரிழிவு, வீங்கிய சுரப்பிகள், தோல் நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுத்தலாம்.
நீரிழிவை கட்டுப்படுத்தும்: கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு மருத்துவத்தில், பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு, கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால், பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.
பல வருடங்களுக்கு முன்பே, அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளி நடத்திய ஆய்வில், கோவைக்காய் நீரிழிவு குறையை, குறைக்கும் குணமுடையது என்பது சொல்லப்பட்டது. நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சேரும், சர்க்கரை அளவை இது கட்டுப்படுத்தும் என்று, பெங்களூருவில் நடத்திய ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பவர்கள், கோவைக்காயை 35 வயது முதலே, உணவில் சேர்த்துக் கொண்டால், நீரிழிவு வராமல் தடுக்கலாம்.
வாய்ப்புண் குணமாகும்: கோவைக்காய் பச்சடி, சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து, தேவையான அளவு உப்பு கலந்து விட்டால், கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள், பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாக கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே, வாய்ப்புண் ஆறி விடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள், வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக் கொள்ளலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும், மேற்சொன்ன பலன்களை பெறலாம்.
தோல்நோய்களை குணமாக்கும்: இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம், மார்புச்சளி, சுவாகுழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல் நோய்களை குணப்படுத்த உதவும். கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்னைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது, கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும். வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.
கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாக பயன்படும்.
