PUBLISHED ON : ஆக 13, 2023

தாய்ப்பாலின் சுரப்பை எந்த விதத்திலும் சிசேரியன் அறுவை சிகிச்சை பாதிக்காது. ஆனாலும், வலி இருக்கும். குழந்தை பெற்ற 48 மணி நேரத்திற்கு படுத்த நிலையில் தாய்ப்பால் தருவது அசவுகரியமாக இருக்கலாம். பின்புறமாக சாய்ந்து, பக்கவாட்டில் படுத்து பாலுாட்டும் போது, மார்பு காம்பை சரியாக கவ்விப் பிடித்து பால் அருந்த குழந்தையால் முடியாமல் போகலாம். இதனால், மார்பு காம்புகளில் விரிசல்கள் ஏற்பட்டு, வலியைத் தரலாம்.
பிட்யூட்டரி சுரப்பி சுரக்கும் புரோலாக்டின், ஆக்ஸிடாசின் என்ற இரு ஹார்மோன்களால் பால் சுரப்பிகள் துாண்டப்படுகின்றன. மன அழுத்தம், கவலை போன்ற எதிர்மறை உணர்வுகள், ஹார்மோன்கன் சுரப்பை பாதிக்கின்றன.
சிசேரியனாக இருந்தாலும், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பால் கொடுப்பது ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்திக்காக மட்டுமல்ல, தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தையின் கண்களை பார்த்து பேசுவது, குழந்தையின் உணர்வு வெளிப்பாட்டிற்கு ஏற்ப வினையாற்றுவதால், பிணைப்பை வலுவாக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் போது மொபைல் போன் உபயோகிப்பது, குழந்தையின் மீதான கவனத்தை திசை திருப்பலாம். அமைதியான சூழலில் இருப்பது, ஆரோக்கியமான விதத்தில் தாய்ப்பால் சுரப்பதற்கு உதவும். உடற்பயிற்சிகள் செய்வது, தாயின் உடலுக்கும், மனதுக்கும் பயனுடையதாக இருக்கும். ஸ்கிப்பிங், ரன்னிங், குதித்தல் போன்ற பயிற்சிகளை தவிர்த்து, நடைபயிற்சி செய்யலாம்.
டாக்டர் ராதாலட்சுமி செந்தில், மகப்பேறியல் மருத்துவ நல ஆலோசகர், சென்னை

