லேப்டாப், மொபைல் போனால் அதிகரிக்கிறதா மலட்டு தன்மை? வாழ்வியல் முறை மாற்றினால் கிடைக்கும் தீர்வு
லேப்டாப், மொபைல் போனால் அதிகரிக்கிறதா மலட்டு தன்மை? வாழ்வியல் முறை மாற்றினால் கிடைக்கும் தீர்வு
PUBLISHED ON : ஆக 10, 2025

குழந்தையின்மை என்றாலே பொதுவாக, பெண்களை குறைகூறிக்கொண்டு இருக்கும் வீடுகள் இன்றும் பல உள்ளன. ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளில் ஆண்கள் மத்தியில் மலட்டுத்தன்மை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏன் என்பதை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் மகப்பேறு மற்றும் மகப்பேறு இன்மை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுகன்யா.
ஆண் மலட்டுத்தன்மை என்பது கணிசமாக அதிகரித்துள்ளதை காண்கிறோம். அதிலும், 25 முதல் 35 வயதினரின் விந்தணுக்களின் தரம், மிகவும் குறைவாக உள்ளதை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில், 20 சதவீதம் ஆண்கள் மலட்டுத்தன்மை அதிகரித்து காணப்படுகிறது.
பல காரணங்கள் இருந்தாலும், பொதுவாக மொபைல், லேப்டாப் பயன்பாடும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இன்றைய தொழில்நுட்ப உலகில், மொபைல், லேப்டாப் பயன்படுத்தவில்லை என்றாலும் அனைவருக்கும், கதிர்வீச்சு தாக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. முடிந்தவரை இதன் பயன்பாட்டை குறைப்பது நல்லது.
மற்றொரு முக்கிய காரணம், ஆண்கள் மத்தியில் காணப்படும் உடல்பருமன், உணவு முறை மற்றும் புகைப்பிடித்தல், ஆல்கஹால் பயன்பாடு.
என்னதான் தீர்வு?
வாழ்வியல் மாற்றமே தீர்வை ஏற்படுத்த முடியும். சிறு வயதிலேயே புகைப்பிடித்தல், ஆல்கஹால் பழக்கங்களை துவங்கிவிடுவதால், விரைவில் விந்தணுக்களின் தரம் குறைந்து விடுகிறது. உடற்பயிற்சி என்பதே பெரும்பாலானவர்கள் மேற்கொள்வதில்லை. முன்பெல்லாம் விந்தணு தரம் குறைவதை, 40-50 வயதுக்கு மேல்தான் பார்க்க முடிந்தது. இப்போது, 25-35 வயதிலேயே காண்கிறோம்.
விந்தணு, கருமுட்டை இரண்டும் வயதின் காரணமாக தரம் குறையும். பெண்கள் 30 வயதுக்குள்ளும், ஆண்கள் 35 வயதுக்குள்ளும் குழந்தை பெற்றுக்கொள்வது சிறந்தது. தேவையின்றி தாமதம் ஏற்படுத்துவதும், குழந்தையின்மைக்கு காரணமாக மாறிவிடும்.