'முற்றிலும் எரியாத பட்டாசுகளை மீண்டும் கொளுத்தவோ, எடுக்கவோ முயலக்கூடாது'
'முற்றிலும் எரியாத பட்டாசுகளை மீண்டும் கொளுத்தவோ, எடுக்கவோ முயலக்கூடாது'
PUBLISHED ON : அக் 26, 2019

மகிழ்ச்சியான தீபாவளிக்கு செய்ய வேண்டியது?
பெற்றோர் கண்காணிப்பில் மட்டும் பட்டாசுகளை வெடிப்பதற்கு, குழந்தைகளை அனுமதிக்க வேண்டும். பட்டாசு வெடித்து, எதிர்பாராமல் காயம் ஏற்பட்டால், பதற்றப்பட வேண்டாம். காயமடைந்த பகுதியை, தண்ணீரில் கழுவவும். வெடி காயத்தால், கண்கள் மற்றும் கைகள் தான் பிரதானமாக பாதிக்கப்படும். கண்களில் காயம் பட்டாலும், தாராளமாக தண்ணீர் ஊற்றி கழுவலாம். கண்களை தேய்க்கக் கூடாது.
பட்டாசு வெடிக்கும் இடத்தில், ஒரு வாளி நீர் எப்போதும், தயாராக வைக்க வேண்டும்.தவிர்க்க வேண்டியவை எவை?
பட்டாசு வெடிக்கும் போது, செருப்பு போட்டுக் கொள்ளவும். பருத்தி ஆடைகளை அணியவும்.நீளமான மற்றும் தளர்வான ஆடைகளில், தீ எளிதில் பற்றும் சாத்தியம் உள்ளதால், அவற்றை தவிர்க்கவும். முற்றிலும் எரியாத பட்டாசுகளை, மீண்டும் கொளுத்தவோ அல்லது எடுக்கவோ முயலக்கூடாது. கைகளில் பட்டாசை பிடித்து வெடிப்பது ஆபத்து. காயத்தின் மேல், மை, காப்பி துாள், மண், டூத் பேஸ்ட், இட்லி மாவு அல்லது ஆயின்மென்ட் போடக் கூடாது.இது, சருமத்தை மேலும் சிதைக்கக் கூடும். எரிந்த பகுதியை, மருத்துவர்கள் பரிசோதனை செய்ய முடியாமல் போகக்கூடும். காயம் பெரிய அளவில் இருந்தால், சாப்பிடவோ, குடிக்கவோ எதுவும் தரக் கூடாது.
விபத்துகளின் தன்மை எப்படி இருக்கும்?
கம்பி மத்தாப்பு உடம்பில் பட்டால், காயம் ஆழமாக இருக்காது; விரைவில் ஆறிவிடும். புஸ்வானம், பாம் போன்ற வகைகளால், கண்கள், கைகளில் பாதிப்பு ஏற்படும்.சமயங்களில், விரல்கள் முழுவதும் துண்டிக்கப்படலாம். கையையே எடுக்க வேண்டிய நிலையும் வரலாம். முகத்தில், கண்களில் தழும்பு ஏற்பட்டால், வாழ்க்கை முழுவதும் அப்படியே இருக்கும்.'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து, ஓரளவு சரி செய்யலாமே தவிர, பழைய நிலைக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை.
விபத்து ஏற்பட்டவுடன் செய்ய வேண்டியது?
உடனடியாக, சுத்த மான நீரில், காயம் பட்ட இடத்தை கழுவ வேண்டும்.தீக்காயம் பட்டு, ரத்தக் கசிவு ஏற்பட்டால், தண்ணீர் ஊற்றி கழுவியதும், சுத்தமான பருத்தி துணியால் காயத்தை மூடி, அருகில் உள்ள டாக்டரிடம் செல்வது வரை, காயம் பட்ட இடத்தை, சற்று உயரமாக துாக்கி வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.தீக்காயம், மேல் தோலில் மட்டும் பட்டு, லேசான பாதிப்பு இருக்கும் பட்சத்தில், சுத்தமாக கழுவிய பின், தேங்காய் எண்ணெய், கற்றாழை கிரீம் தடவினால், சில நாட்களில் சரியாகி விடும். குழாய் நீரில் கழுவும் போது, பட்டாசு அழுத்தம் ஏற்படுத்திய வலி, உஷ்ணம் குறையும்.பட்டாசு வெடிப்பதால் காயம் படுபவர்களில், 90 சதவீதம் பேருக்கு, லேசான, வீட்டிலேயே சரி செய்யக்கூடிய அளவிற்கே இருக்கும். 10 சதவீதம் பேருக்கே, தீவிர காயம் ஏற்படுகிறது. இவர்கள், உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
விபத்து குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதா?
பட்டாசு, வெடி வெடிப்பதால் ஏற்படும் மாசுக்கள் பற்றி, தொடர்ந்து விழிப்புணர்வை, அரசு ஏற்படுத்துவது, நல்ல பலனை தந்துள்ளது.குறிப்பாக, பட்டாசு சப்தத்தால், விலங்குகள், பறவைகள் எந்தளவு பாதிப்பிற்கு உள்ளாகின்றன என்பதை, அனைவரும் சிந்திக்கின்றனர்.தீபாவளி நாளில், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிலை, நல்ல பலனைதந்துள்ளது.தீக்காயத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், ஆண்டுதோறும் குறைந்து வருவது, ஆறுதலான விஷயம்.
டாக்டர் எஸ். செல்வ சீதாராமன்,
தலைவர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை,
குளோபல் ஹெல்த் சிட்டி,
சென்னை.
044 - 4477 7000
98414 16171
