PUBLISHED ON : ஜன 08, 2017

முறையாக யோகாசன பயிற்சி செய்வதால், பல நோய்களை குணப்படுத்த முடியும்; நோய் வராமல் தடுக்க இயலும்; வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும். 'டிவி' பார்த்து, யோகா செய்தால் பக்கவிளைவுகள், பாதிப்பு வரக் கூடும். தகுதிபெற்ற யோகா ஆசிரியரிடம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
யோகப் பயிற்சி உடற்தகுதி, உடல் ஆரோக்கியத்தை தக்க வைத்து, வலு பெற செய்கிறது. உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.
இளம் வயதிலேயே முறையாக பயிற்சி செய்தால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம், கல்லீரல் நோய்கள் வராமல் தவிர்க்க முடியும். ரத்தஓட்டத்தை சீராக வைக்க உதவும். எலும்புகள், தசை நார்களை வலிமையாக, உறுதியாக வைக்க உதவும். ஆசனங்கள் மூலம் மூளைக்கு முறையாக ரத்தஓட்டத்தை செலுத்தி, பிராணவாயு அதிகமாக உட்செலுத்தி நீண்ட ஆயுளை பெற, ஞாபக சக்தியை பெருக்க யோகா உதவுகிறது.
யோகா மூலம் மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு வளர்க்க முடியும். கவனச் சிதறலில் இருந்து விடுபட்டு, மனம் ஒரு நிலைப்படுத்த முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மன இறுக்கம், தேவையற்ற உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை யோகாப் பயிற்சி கட்டுக்குள் வைக்கிறது.
மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், துரித உணவு வகைகளை உண்ண கூடாது. உணவு உண்டபின் யோகா செய்யக்கூடாது. தூங்கி எழுந்தபின், வெறும் வயிற்றில் அதிகாலையில் பயிற்சி செய்ய வேண்டும். தினமும் அரைமணி நேரம் யோகா பயிற்சி செய்வது நல்லது.

