PUBLISHED ON : ஜன 08, 2017

குடிநீர் நமது சினத்தை சில நிமிடத்தில் கரைத்து மாயமாக்கும் தன்மை கொண்டது. நமது உடலில் கோபத்தின்போது, அளவுக்கு மீறி ஏற்படும் வேதியியல் மாற்றத்தால், உருவாகும் அமிலங்கள் ரத்தத்தில் கலக்காமல் நீர்த்திடச் செய்யும். எனவே, நீரை சரியாக பயன்படுத்தி மன அழுத்தத்திலிருந்து எளிதில் இலகுவாக விடுபடலாம்.
நீண்ட நேரம் பயணம், வேலைப் பளு, தொடர்ந்து அமர்ந்த நிலைப் பணி, அதிக சூடு உள்ள சூழல், பணி, தவறான அமில உணவுகள் மிகுதல் காரணமாக மலச்சிக்கல், மலம் கெட்டிப்படுதல் ஆகியன உண்டாகும். அச்சமயம், காலையில் 1 முதல் 3 டம்ளர் குடிநீர் குடிக்கலாம்.
நீரை சரியாகப் பயன்படுத்தும் கலையை அறிந்தாலே நமது மன அழுத்தம் பாதி குறைந்துவிடும்; விலகி விடும். அதேபோல் உண்மைப் பசியை அறிவதற்கும், நீர் நல்ல வழிகாட்டியாக உள்ளது. நீர் அருந்திய ஐந்து நிமிடத்திற்குள் நல்ல பசி எடுத்தால், அது உண்மைப் பசி எனலாம். உணவுடன், உணவு முடித்தவுடன் நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். உணவு முடித்து, 30 நிமிடம் கழித்துக் குடிக்கும் நீர் நல்ல பலனைத் தரும்.
இளஞ்சூடான சீரகக் குடிநீர் குடிப்பது ரத்த ஓட்டம் மற்றும் செரிமானக் கோளாறுகளைச் சரி செய்து வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றையும் சமன்படுத்துகிறது. சீரகக் குடிநீர் உடம்புக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, காய்ச்சல், சளி, தும்மல் போன்ற உபாதைகள் ஏற்படாமல் தடுக்கிறது. நீர் வடிவத்தில் மருந்து உட்கொள்ளும்போது, திசுக்களால் எளிதாக உறிஞ்சப்பட்டு, விரைவாகப் பலன் தரும்.
அதனால் குடிநீரை பயன்படுத்தி, பல்வேறு கஷாயங்கள், மருந்துகள், மருத்துவ குடிநீர்கள் தயாரிக்கப்படுகின்றன.
குறிப்பாக, நிலவேம்புக் குடிநீர், காய்ச்சலின் தீவிரத்தை விரைவில் குறைக்கும் வல்லமைகொண்டது.

