PUBLISHED ON : ஜன 08, 2017

தேங்காய், வாழைப்பழத்தில் அபூர்வமான மருத்துவ குணம் உள்ளது. அதனால்தான், வாழைப்பழமும், தேங்காயும் இறைவனுக்கு பூஜைப்பொருளாக வைக்கப்படுகிறது. இயற்கை உணவை மனிதன் உண்டு வாழ்ந்தால், நோய் இல்லாமல் வாழலாம், என்பதை எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்கின்றன.
இறைவனுக்கு படைக்கப்பட்ட பொருட்களை, அனைவரும் பகிர்ந்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தது.
நாகரிகம் வளர, வளர, இப்பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்தனர். மேலும், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்ற தகவலால், தேங்காய் சாப்பிடுவதை தவிர்த்தனர்.
தேங்காய் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும். தேங்காயுடன் சேர்த்து வாழைப்பழத்தையும் சாப்பிட வேண்டும். இதை மக்கள் மறக்க கூடாது என்பதற்காதான் வழிபாடுகளில் தேங்காய் பழம் பயன்பாட்டுக்கு வந்தது.
அதே போல் முன் காலத்தில் இயேசுநாதர் தன் சீடர்களுக்கு திராட்சை ரசம் கொடுத்தது ஏன் என்றால், மனிதனுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு வெறும் திராட்சை ரசம் உயர்ந்த மருந்து என்பதை அறிந்துதான். வெளிநாட்டினர் சொன்ன பிறகு தான் நமக்கு ஞானம் ஏற்படுகிறது. தெரிந்தும் பயன்படுத்தாமல்
இன்னும் எத்தனை பேர் மருந்து மாத்திரையை நம்பி வாழ்கின்றனர். முற்காலத்தில் தொழுகை முடிந்ததும், பேரீச்சை பழம் கொடுப்பது வழக்கம் இன்னும் சில நாடுகளில் இந்த பழக்கம் இப்போது கூட இருந்து வருகிறது.
மனிதனை எப்படியாவது இயற்கை உணவுக்கு கொண்டு வந்து நோயில்லாமல் வாழ வைக்க வேண்டும் என்பதற்காக எல்லா மதத்திலும் இறைவன் முதன்மையான இயற்கை உணவை வைத்திருந்தார்கள். இதை எல்லாம் சாப்பிட்ட அந்த காலத்து மனிதனை நோய்கள் தாக்கவில்லை.

