PUBLISHED ON : நவ 06, 2022

கரு தரித்த சில வாரங்களுக்குள் கரு கலைந்த போது, கர்ப்பம் கலைந்த சோகத்தை உடன் பணியாற்றும் பெண்ணிடம் பகிர்ந்த அந்த இளம் பெண்ணிடம், தவறான உணவுகளை சாப்பிட்டதே இதற்கு காரணம் என்று கூறினார். சில மாதங்களுக்குப் பின் திரும்பவும் கருவுற்றபோது, சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டார்.
எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்த்த அவர், அவருக்கு மிகவும் பிடித்தமான தேநீர் அருந்துவதை கூட நிறுத்தி விட்டார்; ஆனாலும், மீண்டும் கரு கலைந்தது.
காரணத்தை அலசிய போது அலுவலக வேலை பளு, அடுக்குமாடி வீட்டிற்கு செல்ல பல படிக்கட்டுகளில் ஏற வேண்டிய நிர்ப்பந்தத்தால் ஏற்படும் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று முடிவு செய்தார்.
சிறப்பு சோதனைகள் அவசியம்
இதனால் மீண்டும் கரு தரித்தபோது பயணங்களை தவிர்த்தார்; வெளியே சென்று வருவதையும் குறைத்துக் கொண்டார். எது நடக்கக் கூடாது என்று அவர் அதிகம் பயந்தாரோ, அது மீண்டும் நிகழ்ந்தது; தொடர்ந்து மூன்றாவது முறையாக கர்ப்பம் கலைந்தது. நம்பிக்கை மட்டுமின்றி, காரணங்களை அறியும் ஆர்வமும் போய்விட்டது. எல்லாம் தன் விதி என்று ஏற்றுக்கொண்டார்.
நம்மில் பலருக்கும், ஏன் அறிவியல் ரீதியிலும் கூட கர்ப்பம் கலைவது என்பது ஒரு மர்மமாகவே இருக்கிறது. கரு தரித்ததிலிருந்து 20 வாரங்களுக்குள் இரண்டு அல்லது அதற்கு அதிகமான முறை கர்ப்பம் கலைவதை கரு கலைதல் என்று குறிப்பிடுகிறோம். கருவுற்ற பெண்களில், 15 - 20 சதவீதம் நபர்களுக்கு கரு கலைவு நிகழ்கிறது.
ஆனால், இதற்கு காரணங்கள் என்ன என்று 70 சதவீத நேரங்களில் தெரிவதில்லை.
சில நேரங்களில் தாயின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு, இயற்கையாகவே கர்ப்பம் கலையுமாறு செய்வதுண்டு. ஆனால், எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், பயணங்கள், படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற விஷயங்களே, கர்ப்பம் கலைவதற்கான காரணம் என்று கூறுவதில் துளியளவும் உண்மையில்லை.
கரு கலைவதற்கான காரணிகளில், 'தைராய்டு ஹார்மோன்' அதிகரித்தல் அல்லது குறைதல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு, மரபணு பிரச்னைகள், கருப்பை கோளாறுகள், ரத்த உறைவு போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கலாம்.
வழக்கமாக, முதல் முறை கர்ப்பம் கலைந்தால், சிறப்பு பரிசோதனைகள் தேவைப்படாது; இரண்டு முறைகளுக்கும் அதிகமாக அது நிகழும்போது தான், சிறப்பு சோதனைகள் அவசியமாக இருக்கும்.
சிறப்பு பரிசோதனைகளில், 'ஹிஸ்டெரோஸ்கோப்பி' செய்து கருப்பையின் தன்மை, உள் பரிசோதனை, கரு தரிப்பதற்கு முந்தைய மரபியல் பரிசோதனை, சிதைந்த கருவின் உடற்கூறாய்வு செய்ய வேண்டும்.
ஏமாற்றத்தை தவிர்க்கலாம்
கரு கலைதலுக்கு வழிவகுக்கிற காரணம் ஏதும் கர்ப்பப்பையில் இருக்கிறதா என்று ஹிஸ்டெரோஸ்கோப்பியால் கண்டறிய இயலும். 'கார்யோடைப்' சோதனையில், கருவின் திசுக்களை ஆய்வு செய்து, கரு கலைதலுக்கான மரபியல் கோளாறுகள் அல்லது குரோமோசோமில் குறைபாடுகளை கண்டறியலாம்.
இத்தகைய சோதனைகளை செய்து கொள்வதற்கு, பல தம்பதியர் தயக்கம் காட்டுகின்றனர். சிதைந்த கருவில் உடற்கூறாய்வு செய்வதற்கு சம்மதிப்பதே பாவம் என்று கருதுகிற சில தம்பதியர் இருக்கின்றனர். இதற்கு மாறாக, இது போன்ற சோதனைகள் செய்வதால், கரு சிதைவிற்கான காரணத்தை கண்டறிய முடியும். கரு சிதைவால் ஏற்படும் தேவையற்ற அதிர்ச்சி, ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.
டாக்டர் வி.பாரதி
மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர், சென்னை.
07010 59595
