PUBLISHED ON : செப் 15, 2024

என்னைப் பொறுத்தவரை உடற்பயிற்சி என்பது, பயிற்சிகளை முடித்ததும், வியர்வை வெளியேறி, உடல் முழுவதும் ஒரு புத்துணர்வை உணரச் செய்ய வேண்டும். மாறாக, உடற்பயிற்சிகள் முடிந்ததும், அடித்து போட்டதைப் போன்று வலியையோ இறுக்கத்தையோ உணரக் கூடாது. அந்த அளவுக்கு கடினமான பயிற்சிகளை செய்வது எந்த விதத்திலும் உடலுக்கு உதவாது. இது வரையிலும் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதால், நீண்ட ஆயுள் வாழலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதற்கு மருத்துவ அறிவியல்பூர்வமாக எந்தவித ஆதாரமும் இல்லை.
என் அனுபவத்தில், இளம் வயதினரைப் பார்த்திருக்கிறேன். அரை மணி நேரம் முக்கால் மணி நேரம் என்று குறைந்த அவகாசத்தில் பளு தூக்குவது உட்பட தீவிர பயிற்சிகளை செய்து, முடித்ததும், உடலில் அங்கங்கே தசைகளில் வலியை உணருவார்கள். உடலுக்கு வேண்டிய பயிற்சிகளை செய்து, அதிகபட்சம் கலோரிகளை செலவு செய்து விட்டோம் என்று நினைப்பார்கள். இவர்களுக்கு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பல உடல் பிரச்னைகள் வருகிறது.
தீவீர உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் எதிர்பாராமல் உயிரிழக்கும் சம்பவங்கள் நம் நாட்டில் நிறைய நடக்கின்றன. இதே போன்ற பிரச்னை அமெரிக்காவில் வந்த போது, ராணுவ வீரர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்வதை கட்டாயமாக்கி உள்ளனர்.
இதயத்திற்கு ரத்தம், ஆக்சிஜன், ஊட்டச் சத்துக்களை வழங்கும் கரோனரி ஆர்ட்டரி, இதயத்தின் மேல் பகுதியில் இருந்து, கீழ் நோக்கி வரும். சிலருக்கு இது பிரதான ரத்தக் குழாயான மகாதமனியின் பின்புறம் இருக்கும். தீவிர உடற்பயிற்சி செய்யும் போது, மகாதமனி விரியும். அப்போது கரோனரி ஆர்ட்டரியை அழுத்தும். இதனால் எதிர்பாராத உயிரிழப்பு எற்படுகிறது.
எங்கள் மையத்தில் 30 ஆயிரம் பேரின் சி.டி.ஸ்கேன் முடிவுகளை ஆராய்ந்து, வெளியிட்டு உள்ளோம். மற்ற நாடுகளைவிட ஆசிய மரபினருக்கு, இதய கோளாறுகள், கரோனரி ஆர்ட்டரியில் அடைப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி, இதய அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர், நாராயணா ஹிருதயாலயா, பெங்களூரூ.8067506873 devishetty@narayanahealth.org