PUBLISHED ON : ஏப் 15, 2020

கொரோனா வைரஸ் தொற்று, அனைத்து நாடுகளுக்கும் பரவியிருக்கும் தீவிர தொற்று நோயாக, உலக சுகாதார மையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.சீனாவின், வூஹான் நகரில் முதலில் தோன்றிய இந்த வைரஸ், இதுவரை ஆயிரக்கணக்கில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது; லட்சக்கணக்கானோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலும் பாதித்தவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மருத்துவ ஆலோசனை
கடந்த சில நாட்களாக, கொரோனா பற்றிய சந்தேகங்களைக் கேட்பவர்களின் எண்ணிக்கை, தினமும் ஆயிரம் நோயாளிகளுக்கு குறையாமல் இருக்கிறது. 10 படுக்கைகள் கொண்ட, கொரோனா வார்டில், இரண்டு அவசர சிகிச்சை படுக்கைகள், முழு வென்டிலேட்டர் வசதியுடன், தனியாக அமைத்து உள்ளோம். டெலி மெடிசின், டெலி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக, கொரோனா பற்றிய சந்தேகங்களை கேட்பதற்கு, வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளோம்.
இந்த பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களிடம், இன்னின்ன அறிகுறிகள் இருக்கிறதா என்று கேட்பதை, தவிர்க்கச் சொல்கிறோம். காரணம், டாக்டர்கள், 'இருமல் உள்ளதா, சளி இருக்கிறதா...' என்று ஒரு முறைக்கு இரண்டு முறை கேட்டால், நோயாளி, 'ஆமாம்...' என்று சொல்லி விடும் அபாயம் உள்ளது; அது தான் மனிதர்களின் மனநிலை. அதைவிடவும், என்ன பிரச்னை, என்ன சந்தேகம் என்று அவர்களையே சொல்லச் சென்னால், அதனடிப்படையில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறோம்.
கொரோனாவின் அறிகுறிகள், காய்ச்சலுடன் சாதாரண இருமல் அல்லது மூச்சு விடுவதில் சிரமத்திலிருந்து, கடுமையான தொற்றான, நிமோனியா அல்லது மூச்சுக் குழாய் அழற்சி வரை இருக்கக் கூடும். புளூ காய்ச்சல், சளி இருந்தால், பொதுவாகவே, செவித் திறன் பாதிப்பு, உணவின் வாசனையை நுகர முடியாமல் போவது இருக்கும்.
இந்த புதிய தொற்றிலிருந்து, குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு, சில வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.பாதித்த நபரிடமிருந்து மற்றவருக்கு, தும்மும் போது, இருமும் போது வெளிவரும் திரவத் துளிகளின் வழியாக, வைரஸ் தொற்றுகிறது. இத்திரவத் துளிகள், கதவு கைப்பிடி, பேருந்து, ரயில் அல்லது மெட்ரோ ரயில் இருக்கைகள் போன்றவற்றின் மேற்பரப்புகளில், பல மணி நேரம், உயிர்ப்புடன் இருக்கக் கூடும். இதுவே இதை அதிவேகமாக, பரவலாக பரவும் தொற்றாக ஆகிறது.முகம், கண்கள், வாய், மூக்கை தொடுவதைத் தவிர்க்க வேண்டும். காரணம், வைரஸ் உடலுக்குள் செல்கிற பொதுவான நுழைவு முனைகளாக இவைகள் இருக்கின்றன.
இதுவரையிலும், பெரிய அளவில், குழந்தைகளை கொரோனா பாதிக்கவில்லை என்றாலும், குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு முக கவசங்களை பயன்படுத்தும் போது, மருத்துவ ரீதியில் அங்கீகாரம் பெற்ற, தரமான முக கவசங்களை வாங்க வேண்டும். குறிப்பாக, தொற்று ஏற்படும் இடங்கள், நெரிசலான பகுதிகள் வழியாக பயணிக்கும் போது அல்லது சாலையில் சந்திப்பவர்களோடு உரையாடும் போது கூட, முக கவசம் அணிந்திருப்பதை, பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளை, வீட்டில் உள்ள நபர்கள் உட்பட, யாருடன் பேசினாலும், 1 மீட்டர் துாரத்தில் நின்று பேச வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுத் தர வேண்டும்.
சுய மருத்துவம் கூடாது
ஒரு மருத்துவரிடமிருந்து முறையான அறிவுறுத்தல்கள் இல்லாமல், நாமாகவே மருந்துகள் வாங்கி பயன்படுத்துவது, பிரச்னைகளை தரலாம். ஒட்டு மொத்த உடல் நல அமைப்பிற்கு தீவிர பிரச்னைகளை விளைவிக்கும்.தலைவலிப்பதாக குழந்தைகள் கூறினாலோ அல்லது காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை கவனித்தாலோ, டாக்டரிடம் உடனடியாக அவர்களை அழைத்துச் செல்வது அவசியம்.தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும்இந்த வைரஸ் அச்சுறுத்தல் மறையும் வரை, பிற நாட்டுக்கோ அல்லது பிற மாநிலங்களுக்கோ கூட அத்தியாவசியம் இருந்தாலொழிய, பயணம் செய்வதை தவிர்க்கவும். இதுபோன்ற வைரஸ்கள், குழந்தைகளை எளிதில் தொற்றக் கூடும் என்பதால், அவர்களது பயணத்தையும், அன்னிய நபர்களோடு தொடர்பு கொள்வதையும் கட்டுப்படுத்துவதால், தொற்று ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க முடியும். ஏறக்குறைய, அனைத்து நாடுகளுமே, வெளிநாட்டு குடிமக்கள், தங்கள் நாடுகளுக்கு வருவதை தடை செய்யும் ஆணைகளை பிறப்பித்து வரும் நிலையை நோக்கி, இப்போது சென்று கொண்டிருக்கின்றன.
உள்ளூர் சந்தைகள், கடைத் தெருக்கள், ஷாப்பிங் மால்கள், விளையாட்டுத் திடல்கள், மெட்ரோ ரயில்கள் அல்லது பேருந்துகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு, உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதை அல்லது அனுப்புவதையோ தவிர்க்கவும். கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் தான், ஒருவரிடமிருந்து, மற்றொருவருக்கு இந்த வைரஸ்கள் எளிதாக பரவுகின்றன.
தொண்டை வறட்சி
இல்லாமல் நீர்ச்சத்துடன் இருக்கவும்இத்தகைய நேரங்களில், குழந்தை உட்கொள்ளும் திரவ அளவை அதிகரிப்பது, மிக முக்கியமானது. ஒருவரின் உடலுக்குள் வைரஸ் நுழைவதை, அவரின் உலர்ந்த தொண்டை எளிதாக்குவதால், அடிக்கடி தண்ணீர் குடித்து, தொண்டை உலராமல் வைத்திருப்பது, இந்த வைரசுகள் உட்புகாமல் தடுக்க உதவக் கூடும்.பச்சை இறைச்சியை தவிர்க்கவும்சமைக்கப்படாத அல்லது பச்சை இறைச்சிகளை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். விலங்குகளிலிருந்து வரக்கூடிய கடுமையான நோயை, இத்தகைய இறைச்சிகள் விளைவிக்கக்கூடும். கொரோனா வைரஸ்கள் உயர் வெப்பத்தில் அழியக் கூடும் என்பதால், இறைச்சிகளை முறையாக சமைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நல்ல துாய்மையை பேணுவது
உணவு உண்பதற்கு முன்பு, கழிப்பறையை பயன்படுத்தியதற்குப் பிறகு மற்றும் வெளியே விளையாடிய பிறகு குளிப்பது போன்ற நல்ல துாய்மை பழக்கங்களை, குழந்தைகள் பின்பற்றுமாறு மனதில் பதிய வைப்பது அத்தியாவசியமாகும். சோப்பு மற்றும் நீரைப் பயன்படுத்தி, கைகளை அவர்கள் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். துாய்மையற்ற கைகளைக் கொண்டு, தங்கள் முகங்களை அவர்கள் தொடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.இந்த காலக்கட்டத்தில், குழந்தைகளை கட்டி யணைப்பதை அல்லது முத்தமிடுவதை தவிர்ப்பது நல்லது; அவர்களையும் இவற்றை செய்ய அனுமதிக்க வேண்டாம். அன்பை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன.வைரஸ் நோயிலிருந்து தங்களையும் மற்றும் தங்களது குடும்பத்தையும் பாதுகாப்பதற்கு, மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதற்கும், இது குறித்த அறிவை குழந்தைகள் பெற்றிருப்பதை உறுதி செய்து, தனித்திறன் பெற்றவர்களாக அவர்களை ஆக்குங்கள்.
மருத்துவர், அரசு, பெற்றோர் உட்பட, அனைவருமே குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக, அயராது பணியாற்றி வருகின்றனர் என்று எடுத்துக்கூறி, குழந்தைகளை பாதுகாக்கப்பட்டவர்களாக உணரச் செய்வது பெற்றோரின் கடமை!
டாக்டர் பி. கண்ணன்,
குழந்தைகள் நல மருத்துவர்,
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்,
மதுரை.
0452 4263000
