PUBLISHED ON : ஏப் 13, 2025

சென்னையைச் சுற்றியுள்ள மாவட்ட கிராமப்புறங்களில், மாதம் ஒருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்தி, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் பரிசோதனை செய்கிறோம்.
பரிசோதனைக்கு வருபவர்களில் பெரும்பாலும் சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுவதை பார்க்கிறோம்.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், தலைவலி, உடல் வலி என்று டாக்டரிடம் சென்று வலி மாத்திரை எழுதி வாங்கினால், ஆண்டுக்கணக்கில் அதே மாத்திரை தொடர்ந்து சாப்பிடுவது முக்கிய காரணம்.
எல்லா வகையான கற்களுக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சிறுநீரகங்களுக்கு உள்ளேயே இருக்கும் சிறிய கற்களை மாத்திரைகள், போதுமான அளவு திரவ உணவுகள் குடிப்பதன் வாயிலாகவே வெளியேற்றலாம்.
சிறுநீர் பாதையை கல் அடைத்து இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும். சிறுநீர் கற்களில் கால்சியம், பாஸ்பரஸ், யூரிக் அமிலம், ஆக்ஸ்சலேட் என்று நான்கு வகை உள்ளன. சில சமயங்களில் எதிர்கால தேவைக்கு என்று சிறிதளவு கால்சியம் சத்தை சேமித்து வைக்கும்.
உணவில் இருந்து கிடைக்கும் கால்சியம், சாக்லேட்டில் உள்ள பாஸ்பரஸ் இரண்டிலும் தேவையான அளவை வைத்துக் கொண்டு, அளவுக்கு அதிகமானதை சிறுநீரகங்கள் வெளியேற்றி விடும்.
இது தான் சிறுநீரகங்களின் வேலை. மரபியல், வேறு ஏதேனும் காரணங்களால், இந்த சமநிலை தவறும் போது, அதிகப்படியான கால்சியம், பாஸ்பரஸ் உடலில் தங்கி, கற்களாக உருவாகும்.
சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு, கட்டுப்பாடான ரத்த அழுத்தம், சோடியம் குறைவான உணவு அவசியம். கட்டுப்பாடில்லாத ரத்த சர்க்கரை அளவு நேரடியாக சிறுநீரகங்களை பாதிக்கும். உடல் பருமன் மறைமுகமாக பாதிக்கும்.
டாக்டர் ஈ. ராம்பிரசாத்,
பேராசிரியர், தலைவர், சிறுநீரகவியல் துறை, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையம், சென்னை044 - 4592 8683/504ramprasad.e@sriramachandra.edu.in