கொரோனா 'பாசிட்டிவ்' வந்தாலும் மனதில் 'நெகட்டிவ்' வேண்டாமே!
கொரோனா 'பாசிட்டிவ்' வந்தாலும் மனதில் 'நெகட்டிவ்' வேண்டாமே!
PUBLISHED ON : மே 21, 2021

கோவை:கொரோனா தொற்று பாசிட்டிவ்வாக இருந்தாலும், நெகடிவ் எண்ணங்களை துாக்கியெறிந்தாலே, எளிதில் மீண்டு விடலாம் என்கின்றனர், உளவியல் ஆலோசகர்கள்.
'இனிமே கொரோனா தொற்று இல்லாதவர்களை தான் தனிமைப்படுத்தனும் போல' என்பது போல, கோவையில், தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் மத்தியில் பீதியும், எதிர்காலம் குறித்த அச்சமும் பெருகி வருகிறது. மருத்துவத்துடன், பாசிட்டிவ் எண்ணங்களே இந்த வேளையில் முக்கியம் என்கின்றனர், உளவியல் நிபுணர்கள்.
உளவியல் நிபுணர் அருள்வடிவு கூறியதாவது:கொரோனா தொற்றை பொருத்தவரை, இருவிதமான மனநிலையில் இருப்பவர்கள் தான் அதிகம். அசாதாரண தைரியத்துடன் இருப்பவர்கள் முதல் ரகம். இரண்டாம் வகை, அதீத பயத்துடன் நம்பிக்கை இழப்பவர்கள். எதற்கெடுத்தாலும் பயப்படுவதும், பதற்றமடைவதும் சூழலை மாற்றிவிடும். எனவே, சம மனநிலையை ஏற்படுத்தி கொள்வது அவசியம்.
பரிசோதனையில் லேசான அறிகுறி இருப்பவர்கள், வீட்டிலே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மாத்திரைகளை முறையாக எடுத்து கொள்வதோடு, சத்தான உணவும், ஓய்வும் அவசியம். தொடர் காய்ச்சல், இருமல் இருக்கும்பட்சத்தில், உடனே மருத்துவமனையை நாட வேண்டும்.எதிர்மறையான எண்ணங்களை, துாக்கி வீசினாலே விரைவில் குணமடையலாம்.
கொரோனா பற்றிய லேட்டஸ்ட் தகவலை தெரிந்து கொள்வதில், ஆர்வம் காட்ட வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தியை போல, தன்னம்பிக்கையும் மனஉறுதியும், தொற்றில் இருந்து மீள உதவும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இவரை தொடர்பு கொள்ள, 98941 24427 எண்ணில் அழைக்கலாம்.
