PUBLISHED ON : செப் 22, 2024

மிகுந்த கோபத்தையும்,எரிச்சலையும் உண்டாக்கும் நோய்களில் முதன்மையானது மூல நோய். ஆசனவாயில் எரிச்சல், வலி, ரத்தக்கசிவு, அரிப்பு, உட்காரவே முடியாமல் நெருடல், குத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால், மலக்குடலின் ரத்தக் குழாய்களில் உராய்வு ஏற்பட்டு, வீக்கமும் அழற்சியும் உண்டாவதே பிரச்னைக்கு காரணம்.
'ஆசனவாயில் விரல் பரிசோதனை' வாயிலாக உள், வெளி, ரத்த மூலம் என்ற மூன்றில் என்ன வகை என்பதைக் கண்டறியலாம்.
சித்த மருத்துவத்தில், பல வகையான மூலிகைகள் இதற்கு உள்ளன. அவற்றில் தலையாயது துத்திக்கீரை. இதன் இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து, விழுதாக அரைத்து, தினமும் 10 கிராம், ஐந்து நாட்கள் சாப்பிடலாம்; வலி, எரிச்சல் கட்டுப்படும். இதன்பின், துத்தி இலைகளைப் பறித்து நிழலில் காய வைத்து, பொடி செய்து தினமும் இருவேளை அரை டீ ஸ்பூன் அளவு மோருடன் கலந்து, 48 நாட்கள் குடிப்பதால், மூல நோய்க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
பிரண்டை, அம்மன் பச்சரிசி, சோற்றுக் கற்றாழை, அருகம் புல், வாழைப்பூ, ஆடாதொடா, இம்பூறல், மந்தாரை, வில்வம் பழம் ஆகியவையும் மூல நோய்க்கு சிறந்தவை.
துத்திக்கீரை சூரணம், திரிபலா சூரணம், கடுக்காய் லேகியம், கருணை லேகியம், மூலக்குடார தைலம், நத்தை சிப்பி பற்பம், சிலாசத்து பற்பம் போன்ற எளிய சித்த மருந்துகளால் நல்ல பலன் கிடைக்கும்.
நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது, மூல நோய் வராமல் தடுக்கும்.
டாக்டர் மூலிகைமணி அபிராமி,
மூலிகைமணி சித்த மருத்துவ மையம்,சென்னை 96000 10696, 90030 31796consultabirami@gmail.com