தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தலைமுடி பிரச்னையை தீர்க்கலாம் எளிதில்

தலைமுடி பிரச்னையை தீர்க்கலாம் எளிதில்

தலைமுடி பிரச்னையை தீர்க்கலாம் எளிதில்


PUBLISHED ON : ஜூலை 25, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான் 'தினமலர்' நாளிதழுக்கு மருத்துவக் கட்டுரை எழுதத் துவங்கியதும், எனக்கு வந்த கடிதங்களில் பெரும்பாலானவை, தலைமுடி உதிர்வதைத் தடுப்பது எப்படி என்பது தொடர்பாக தான் இருக்கின்றன. ஒருவரின் தோற்றப் பொலிவுக்கு தலைமுடி முக்கிய காரணமாக அமைகிறது. பழங்கால முரல் ஓவியங்களில் வரையப்பட்ட பெண்கள், தாமரை போன்ற கண்களையும், நீண்ட கூந்தலையும் பெற்றிருப்பர். ஆண்களுக்கு அப்போதே வழுக்கை விழுந்திருக்க வேண்டுமென தோன்றுகிறது; அந்த ஓவியங்களில் உள்ள ஆண்கள், தலைப்பாகையுடன் தான் தோற்றமளிப்பர்!

இப்போது அந்த நிலை மாறி வருகிறது. பெண்கள், மிகக் குறைந்த நீளமுடையதாக தலைமுடியை வெட்டிக் கொள்கின்றனர். வழுக்கை தலை உடைய ஆண்கள், தலையை மறைப்பது இல்லை. 'டிவி' மற்றும் திரைப்படங்களில் தோன்றும் ஆண் களும், பெண் களும், தலை நிறைய முடியுடன் தான் உள்ளனர்.  ஆனால், அது உண்மையா? சவுரி,  இணைப்புத் தலைமுடி, விக், கம்ப்யூட்டரில் மாற்றப்பட்ட உருவங்கள் என, பலவும் செயற்கையானவையாகவே  உள்ளன. ஆண்கள், பெண்கள், ஏன்... குழந்தைகளுக்குக் கூட தலைமுடி உதிர்வதால், இதைத் தடுக்க மருந்துகள் உள்ளன  எனக் கூறி, அதற்கான சந்தை தான் விரிவடைந்துள்ளது. முடி வளர்வதும், உதிர்வதும் சுழற்சி முறையில் ஏற்படுவதே. இரண்டு முதல் ஆறு ஆண்டுகள் வரை முடி வளரும்; பின், மூன்று மாதங்கள், வளர்வது நிற்கும். வளர்வது நின்றதும், முடி உதிரும். அதன் பின், மீண்டும் வளரும். எனவே, தலையில் எப்போதும், 10 சதவீத முடி கொட்டிக் கொண்டே இருக்கும். 80 முதல் 90 சதவீத முடி வளர்ந்து கொண்டே இருக்கும்.  நாள் ஒன்றுக்கு, 75 முதல் 100 முடி வரை உதிர்வது, சாதாரண நிலையே. உதிரும் வேர்க் காலிலிருந்தே மீண்டும் புதிய முடி முளைக்கும். மீண்டும் அதற்கான சுழற்சியைத் துவங்கி விடும். ஒரு மாதத்தில் ஒன்றரை அங்குலம் வரை முடி வளரும். வயது ஏற, ஏற முடி வளர்வது குறையும்; வேர்க் கால்களின் எண்ணிக்கையும் குறையும்.  நாள் ஒன்றுக்கு 150 முடிகளுக்கும் மேல் உதிர்ந்தால், மருத்துவரீதியான கோளாறு ஏற்பட்டுள்ளதென்று கொள்ளலாம். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு எவ்வளவு முடி கொட்டுகிறதென்பது, அவருக்கு மட்டுமே தெரியும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். டாக்டரிடம் காண்பித்தும், அவர் சரியாகக் கணிக்கவில்லை என்று கூறக் கூடாது. பெண்கள், கூந்தலை, 'கிளிப்'புகள் மூலம் இறுக்குவது, மிகவும் இறுக்கமாக பின்னுவது ஆகியவற்றால், முடி உதிரும். சத்தான உணவு சாப்பிடாமையும் முடி உதிர்தலுக்குக் காரணமாகிறது. துரித உணவு, ரெடிமேட் உணவுகளைச் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான புரோட்டீன், வைட்டமின், தாதுப் பொருட்களான இரும்பு, துத்தநாக, சுண்ணாம்புச் சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

ஹார்மோன் கோளாறும், முடி உதிர்தலுக்குக் காரணமாகிறது. இந்தக் கோளாறால், தலையிலிருக்கும் மீதி முடியும், வலுவிழந்து, களையிழந்து போகும். தைராய்டு, கல்லீரல் ஆகியவற்றில் பிரச்னை, ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டெரோன், ஆண்ட்ரோஜென் ஆகியவை அபரிமிதமாகச் சுரப்பதும் காரணமாக அமையலாம்.

ஆண்ட்ரோஜென் சுரப்பது அதிகரித்தால், ஆண்களுக்கு, வழுக்கை விழும். பெண்கள் உடலிலும் ஆண்ட்ரோஜென் அதிகரித்தால், ஆண்கள் போல வழுக்கை விழும். படபடப்பு, மாத விலக்கு, கருத்தரிப்பு, பால் ஊட்டும் காலம், மெனோபாஸ், பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் ஆகிய காரணங்களால், ஹார்மோன் சுரப்பதில் மாறுபாடு ஏற்படும்.

'அலோபீசியா அரேட்டா' (திட்டு திட்டாக முடி உதிர்வது) என்ற பாதிப்பு ஏற்படும் போது, அளவுக்கு அதிகமாக முடி உதிரும். தலையில் ஆங்காங்கே, வட்ட வடிவமாக, முற்றிலும் முடி கொட்டிய நிலை இது. முடி சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனையில் மட்டுமே இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பாதிப்பு, 'அலோபீசியா டோட்டாலிஸ்' (முடி முற்றிலும் உதிர்தல்) என்ற நிலையை, அதாவது தலையில் ஒரு முடி கூட இல்லாமல், முற்றிலும் உதிர்ந்து விட்டால், இதற்கு எடுக்கப்படும் சிகிச்சை, வெற்றிகரமாக அமைவதில்லை. புற்று நோயாளிகள் எடுத்துக் கொள்ளும், 'கீமோதெரபி' சிகிச்சையின் போதும், முடி உதிரும். சிகிச்சை முடிந்ததும், தலைமுடி தானாகவே வளரத் துவங்கி விடும். ரேடியோ கதிர்கள்படுவதோ, காயத்தால் தழும்பு ஏற்பட்டாலோ, அந்த இடங்களில் முடி மீண்டும் வளராது. பரம்பரை வழுக்கை ஏற்படுவதும் இயல்பு தான். தலைமுடி மீண்டும் வளராது என்ற நிலையை எட்டியவர்கள், இருக்கும் முடியைத் தக்க வைத்துக் கொள்ள சில நடைமுறைகளைப் பின்பற்றலாம். முடியை நல்ல முறையில் பராமரிக்க, பொதுவாகவே சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

* வாரத்திற்கு இரு முறை, தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். விரல்களால், முடியின் வேர்க்கால்களில் எண்ணெயை நன்கு தடவ வேண்டும். நகங்களால் தேய்க்கக் கூடாது. எந்த விதமான ஷாம்பூவோ, ரெடிமேடு சிகைக்காய் பவுடர்களோ தலைக்குத் தேய்த்துக் குளிக்கக் கூடாது. சுத்தமான சிகைக்காயை, பூந்திக்காயுடன் சேர்த்து அரைத்து வைத்து, அதையே தலைக்கு உபயோகப்படுத்த வேண்டும். ஷாம்பூவிலும், மற்ற பவுடர்களிலும், அதிக நுரை வருவதற்காக ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இது முடியின் தன்மையையே மாற்றி விடும்.

* தலைமுடியைச் சுருட்டிக் கொள்ள ஆசைப்பட்டு, பார்லரில் ரசாயன சிகிச்சை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் தலைமுடியை இறுக்கமாகப் பின்னிக் கொண்டால், மறு நாள் காலை அழகான சுருட்டை முடியைக் காணலாம்.

* தலை உலர்த்தும் கருவியை, முடி மீது நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது. தலையை ஒரு துண்டால் மூடிக் கொண்டு, கருவியிலிருந்து வெளிவரும் சூடு, துண்டில் பட்டு, அந்தச் சூட்டில் தலைமுடி காயும் வகையில், கருவியைப் பயன்படுத்த வேண்டும்.

* சத்தான உணவு சாப்பிட வேண்டும். நாள் ஒன்றுக்கு 6 கிராம் அளவில் உடலுக்கு புரோட்டீன் சத்து தேவை. இது தவிர, இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, சுண்ணாம்புச் சத்து அடங்கிய உணவு வகைகளையும் சாப்பிட வேண்டும்.

* 'மினாக்சிடில்' என்ற மருந்தை தலையில் தினமும் இரண்டு வேளை தடவினால், ஆறு மாதத்தில் முன்னேற்றம் காணலாம். 'பைனாஸ்டிரைடு' என்ற மாத்திரை உள்ளது. இந்த மாத்திரை சாப்பிட்டால், ஆண்களுக்கு முடி உதிரக் காரணமாக இருக்கும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்பட்டு, சீக்கிரம் வழுக்கை ஏற்படாமல் பாதுகாக்கலாம். எக்காரணம் கொண்டும், பெண்கள் இந்த மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது.

* 'ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன்' செய்து கொள்ளலாம். முடி மாற்று அறுவை சிகிச்சை என்று இதற்கு பெயர். பிளாஸ்டிக் சர்ஜன் இதைச் செய்வார். ஆனால், இந்தச் சிகிச்சைக்கு கட்டணமும் அதிகம்; அதிக நேரமும் எடுக்கும். தலைமுடி முற்றிலும் உதிர்ந்து விட்டவர்கள், இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us