PUBLISHED ON : மே 11, 2025

'ஏன் இந்த டி.வி.,யை இப்படி சவுண்ட் அதிகமா வைக்கறீங்க...'
'இல்லையே... கம்மியாதான் இருக்கு' என்று வீட்டு முதியோரிடம் பதில் வந்தால் உடனடியாக, மருத்துவர்களை பார்க்க வேண்டியது அவசியம்.
முதுமையில் ஏற்படும் செவித்திறன் குறைபாட்டின் அறிகுறிகளில், இதுவும் ஒன்று என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து, காது - மூக்கு - தொண்டை அறுவை சிகிச்சை பிரிவுடாக்டர் ராஜா சண்முகம் கூறியதாவது:
தலைமுடி நரைப்பது போல, முதுமையில் காதுகளின் செவித்திறன் குறையும். செவித்திறன் நரம்புகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாலும், ரத்த ஓட்டம் குறைவதாலும் இப்பாதிப்பு ஏற்படுகிறது.
அன்றாட வாழ்வை பாதிக்கும்போது இவர்கள், 'ஆடியோமெட்ரி' பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தற்போது, டிஜிட்டல் கருவிகள் பல உள்ளன; இதன் வாயிலாக, அனைவரையும் போல் இயல்பாக வாழ முடியும். பொதுவாக, 60 வயதுக்குமேல் செவித்திறன் குறைபாடு ஏற்படுகிறது. தற்போது அதிகரிக்கும் மொபைல் பயன்பாடு காரணமாக, நடுத்தர வயதினருக்கே 40 வயது முதல் செவித்திறன் குறைவதை காண்கிறோம்.
செவித்திறன் குறைவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாது. டி.வி., அதிக சத்தம் வைத்து கேட்பது, மொபைல் போனில் ஒரு முறைக்கு பல முறை என்னவென்று கேட்பார்கள். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக உஷாராகிவிட வேண்டும்.
இது தவிர, காது ஜவ்வில் ஓட்டையாகி சீழ் வடிவது, காதுகளில் அடிக்கடி நீர் சென்று தொற்று ஏற்படுவது ஆகியவையும் அறிகுறிகள். சர்க்கரை நோயாளிகள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதிகமான, தொடர்ச்சியான சத்தத்தில் இருந்து விலகி இருப்பது, மொபைலில் அதிக நேரம் பேசுவது ஆகியவற்றை தவிர்ப்பது சிறந்தது.
தொண்டையில் குரல் மாற்றம், அடிக்கடி தொண்டை கனைத்தல், உணவு விழுங்க சிரமம் இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.