தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூலிகை கட்டுரை

மூலிகை கட்டுரை

மூலிகை கட்டுரை


PUBLISHED ON : ஆக 01, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொசுத்தொல்லை... இனி இல்லை

டியுரண்டா என்ற ஸ்கை பிளவர்

கொசுக்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள பலவிதமான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். கொசு கடித்து அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்புவதைவிட கொசு நம்மை கடிக்காமல் பார்த்துக் கொள்வதே உத்தமம். ஆகவேதான் நம் வீட்டில் கொசு நுழையாதபடி ஜன்னல், கதவுகளை வலை வைத்து அடைத்துவிடுகிறோம். என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும் நம் வீட்டிற்குள் இருக்கும் கொசு இனப்பெருக்கம் செய்து, நம்மை துரத்தி துரத்தி கடிக்கின்றன.

வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வகையான கொசுக்கள் ஆட்சிபுரிகின்றன. அவை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. கொசு கடித்தால் பரவும் நோய்கள்கூட ஒன்றிரண்டு நாட்கள் தாமதமாகத்தான் நோய் குறிகுணங்களை உண்டாக்குகின்றன. ஆனால் கொசு கடித்த உடனேயே தோன்றும் அரிப்பானது நிற்காமல் தொடர்ந்து தடிப்புகளாகவும், சிவப்பு கீறல்களாகவும் சில சமயங்களில் புண்களாகவும் மாறிவிடுகின்றன.

சிறு குழந்தைகள், வறட்சியான, மென்மையான தோல் உடையவர்கள், சளி போன்ற ஒவ்வாமை உடையவர்கள், மலைப் பிரதேசங்களுக்கு செல்பவர்கள், வெளிநாடுகளிலிருந்து இங்கு வருபவர்கள் அடிக்கடி கொசுக்கடியின் ஒவ்வாமைக்கு ஆளாகின்றனர். கொசு நம்மை கடிக்கும்போது ஒரு வகையான திரவத்தை நமது தோலுக்குள் செலுத்தி, மரத்துப்போகச் செய்து, பின் தேவையான ரத்தத்தை உறிஞ்சிக் கொள்கிறது. நாம் என்னதான் இலவசமாக ரத்ததானம் செய்தாலும் நமது ரத்தத்திற்கு கட்டணமாக அரிப்பு, தடிப்பு, எரிச்சல், புண்கள், கீறல்கள், நோய் கிருமிகள் என பல உபாதைகளை நமக்கு கொடுத்துவிடுகின்றன.

கொசு கடித்த இடங்களில் சிவப்பான குருக்கள் தோன்றி, பின் புண்ணாக மாறி, இறுதியில் தழும்பாக நிலைத்து விடுகின்றன. முழங்கை, முழங்காலுக்கு கீழ்ப்பட்ட பகுதிகளிலேயே கொசுக்கடியினால் ஒவ்வாமை ஏற்படுகின்றன. கொசுக்களை அழிக்க பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் ஆரோக்கிய கோளாறுகளை ஏற்படுத்துவதால் இயற்கையே ஏற்படுத்தி தந்த பாதுகாப்பு மூலிகைதான் டியுரண்டா என்ற ஸ்கை பிளவர்.

டியுரண்டா எரெக்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட வெர்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த புதர்செடிகள் மலைப்பகுதிகளிலும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும், வீட்டு வாசலிலும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன.

நீல நிற, கொத்து கொத்தான பூக்களை உடைய டியுரண்டாவில் சப்போனின்களும், மன மயக்கத்தையும் ஏற்படுத்தக் கூடிய ஆல்கலாய்டுகள் நிறைந்துள்ளன. இதன் பழுத்த பழங்கள் லார்வா கொசுக்களை அழிக்கும் தன்மை உடையதால் மழை அதிகம் பெய்யும் மலைப்பிரதேசங்கள் மற்றும் குளிர்பிரதேசங்களில் இயற்கையாகவே இந்த தாவரங்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகின்றன. இதன் பழுத்த பழங்கள் தரையில் விழுந்து, மழைநீரில் ஊறி கொசு லார் வாக்கள் உற்பத்தியாவதை கட்டுப்படுத்துகின்றன.

டியுரண்டா செடி இலைகளை மைய அரைத்து கொசுக்கடியினால் ஒவ்வாமை ஏற்பட்ட இடங்களில் தடவிவர ஒவ்வாமை நீங்கி, தோல் தடிப்பு மற்றும் தினவு குறையும். டியுரண்டா செடி இலைகளை இடித்து, சாறெடுத்து, 2 பங்கு விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி, பதத்தில் வடிகட்டி தடவிவர அரிப்பு நீங்கும்.

டியுரண்டா செடியின் பழுத்த பழங்களை வேப்பெண்ணெயில் நன்குஊறவைத்து, தெளிப்பான் மூலம் கொசு அதிகம் பரவும் இடங்களிலும், நீர் தேங்கியுள்ள இடங்களிலும் தெளித்துவர கொசு பெருக்கம் கட்டுப்படும். கொசு லார்வாக்கள் அழியும்.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.



சித்த மருத்துவம் பெரும்பாலான மக்களை ஈர்த்து வருகிறது. அறிவியல் பூர்வமாக ஆராயப்படாத மருந்துகள், மருந்துகளின் செயல்பாடு மற்றும் தகுதியற்ற மருத்துவர்கள் போன்ற காரணங்களால் சித்த மருத்துவம் சிலரால் புறக்கணிக்கப்பட்டு வந்தது. ஆனால் நமது பாரம்பரிய மருத்துவக்கருத்துக்களிலுள்ள உண்மை தற்சமயம் வெளிநாட்டவர்களால் நிரூபிக்கப்பட்டு வருவதால் சித்த மருத்துவத்தின் புகழ் அதிகரித்து வருகிறது. டில்லியிலுள்ள குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா என்னும் இந்திய அரசு நிறுவனம் ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவ முறைகளின் தரத்தை மேம்படுத்த சில தரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியாவின் கீழ் இயங்கும் என்.ஏ.பி.எச். என்னும் மத்திய அரசு நிறுவனம் ஆயுஷ் மருத்துவமனைகளை ஆய்வுசெய்து, தரச்சான்றிதழ் வழங்கி வருகிறது.

பெரிய ஆங்கில மருத்துமனைகளைப் போன்றே சித்த மருத்துவமனைகளையும் நடத்த சில விதிமுறைகளையும், தரங்களையும் நிர்ணயம் செய்துள்ளது. இந் விதிமுறைகளை பின்பற்றி சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவமனைகள் தரமாக செயல்பட வேண்டியிருப்பதால் சித்த மருத்துவத்தின் புகழ் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பரவி, வெளிநாட்டவர்களையும் ஈர்க்க ஆரம்பிக்கிறது.



எனக்கு இரவு தூங்கும் சமயத்தில் இரு கால்களில் ஒன்று தூக்கி, தூக்கி இழுத்துக்கொள்கிறது. தினசரி இவ்வாறு ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது?

கிருஷ்ணமூர்த்தி, மதுரை

குளிர்காலத்தில் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையால் இதுபோன்று ஏற்படலாம். கீரைகள், பழங்கள், பால் அதிகம் சாப்பிடுவது நல்லது. அசுவகந்தி லேகியம் - 5 கிராம் தினமும் 2 வேளை சாப்பிடலாம். கற்பூராதி தைலம் என்னும் மருந்தை கால்களில் தடவி வந்தாலும் குணமுண்டாகும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us