தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூலிகை கட்டுரை

மூலிகை கட்டுரை

மூலிகை கட்டுரை


PUBLISHED ON : ஆக 08, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுகமாக சுவாசிக்கலாம்!

நுரையீரலை தாக்கக்கூடிய நுண்கிருமிகள், ஒட்டடை, வாகனப்புகை, பூக்களின் மகரந்த தூள்கள், செயற்கை நறுமண திரவியங்கள் போன்றவற்றால் நுரையீரலின் பாதை, மூச்சுக்குழல்களின் நுனிகள் ஆகியவற்றில் இறுக்கம் ஏற்பட்டு, சுருங்குகின்றன. அதுமட்டுமின்றி நுரையீரலின் காற்று குமிழங்கள் நிரந்தரமாகவோஅல்லது தற்காலிகமாகவோ விரிந்தோ அல்லது ஒட்டியோ காணப்படுகின்றன. இதனால் அன்றாட செயல் பாட்டிற்கு ரத்தத்திற்கு தேவையான ஆக்சிஜனை என்னும் உயிர் காற்று கிடைக்காமல் செல்கள் திணறுகின்றன. இதனால் கூடுதல் ஆக்சிஜனை வேண்டி, மூளையின் கட்டளைப்படி நுரையீரல் வேகமாக சுருங்கி, விரிய ஆரம்பிக்கிறது. இதுவே மூச்சிரைப் பின் ஆரம்ப கட்டமாகும். நாட்கள் செல்லச் செல்ல அவ்வப்போது தோன்றும் இந்த மூச்சிரைப்பானது அடிக்கடி தோன்றி ஆஸ்துமாவாக மாற ஆரம்பிக்கின்றது.

நுரையீரல் பாதையில் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் கிருமித்தொற்றினால் இயல்பாகவே நுரையீரலின் உட்புறம் தங்கியுள்ள சளிச்சவ்வானது அழற்சியுற்று, சளி கசிவை அதிகப்படுத்தி, மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, மூக்கின் உட்புறம் மற்றும் தொண்டைப்பகுதியில் ஒருவித அரிப்பு, தலைவலி போன்ற உபாதைகளை ஏற்படுத் துகின்றன. இதன் தீவிர நிலையில் கடுமையான இருமல் மற்றும் தொண்டைவலியும் உண்டாகி, கிருமித்தொற்று அதிகரித்து, சுரமும் உண்டாகிவிடுகிறது. இதனை கட்டுப்படுத்த உட்கொள்ளும் எதிர் உயிரி மருந்துகளால் தற்காலிமாக கிருமித் தொற்று நீக்கப்பட்டாலும், நோய் எதிர்ப்புசக்தி குறைந்து, அடிக்கடி சளி, இருமல், மூச்சிரைப்பு போன்ற தொல்லைகள் உண்டாகின்றன.

நுரையீரல் பாதையில் ஏற்படும் கிருமித்தொற்றை நீக்கி, ஒவ்வாமையை கட்டுப் படுத்தி, அதனால் அதிகமாகும் ஹிஸ்டமைன்களை குறைத்து, மூச்சுப்பாதை, மூச்சுக்குழல் ஆகியவற்றை விரிவடைச் செய்யும் அற்புத மூலிகைதான் எபிட்ரா, ஆங்கில மருத்துவத்தில் இதிலிருந்து வேதி முறையில் பிரித்து எடுக்கப்படும் எபிட்ரின், நார்எபிட்ரின் போன்ற மருந்துகள் சுவாசத்தொல்லையை நீக்க பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன.

எபிட்ரா ஜெரார்டியானா என்ற தாவரவியல் பெயர் கொண்ட எபிட்ரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த தாவரங்கள் இமயமலைப் பகுதிகளில் பெருமளவு வளர்ந்து காணப்படுகின்றன. இதில் அடங்கியுள்ள எபிட்ரின், எபிட்டிராக்சேன், சுடோஎபிட்ரின் போன்ற வேதிச்சத்துகள் நுரையீரல் பாதையில் ஏற்படும் இறுக்கத்தை குறைத்து, சுவாசத்தை எளிதாக்குகின்றன.

நேரிடையாக எபிட்ராவை மருந்தாக உட்கொள்ளாமல். இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிச்சத்துகளை மருந்தாக உட்கொள்ளும் பொழுது மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவு உட்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா போன்ற நாடுகள் எபிட்ரா மூலிகையின் உபபொருட்களை உணவாக உட்கொள்ள தடை விதித்துள்ளனர். ஆனால் உலர்ந்த எபிட்ரா மூலிகைப்பொடியை 100 முதல் 200மில்லி கிராமளவு தினமும் உட்கொள்வது எந்தவித பக்கவிளைகளும் இல்லாமல் சுவாசத் தொல்லைகளை நீக்கும், உலர்ந்த எபிட்ரா இலைகளை 50 முதல் 100மில்லிகிராமளவு தேனுடன் கலந்து சாப்பிட இரைப்புநோய் நீங்கும்.

எபிட்ரா, ஆடாதோடை, நிலவேம்பு, அதிமதுரம், வால்மிளகு, மருதம்பட்டை, கடுக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, கர்க்கடாகசிங்கி ஆகியவற்றை சமஅளவு எடுத்து, பொடித்து, சலித்து 200மிலி கிராம் தினமும் இரண்டு வேளை தேனுடன் கலந்து சாப்பிட வறட்டு இருமல், இரைப்பு ஆகியன நீங்கும்.

சளி நன்கு வெளியேறும், சுவாசம் சுலபமாகும். சித்தா, ஆயுர்வேதா மருந்துக் கடைகளில் கிடைக்கும் கோப்லின் என்னும் இருமல் மாத்திரை மற்றும் மருந்துகளில் எபிட்ரா சேர்க்கப்படுகிறது. இதனை காலை-1 , இரவு-1 தினமும் இரண்டு வேளை 10 நாட்கள் உட்கொள்ளலாம்.

டாக்டர். ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை



சிலருக்கு ரோமமானது வறட்சியுடன் காணப்படும். அதிலும் ஷாம்பு, சோப்பு போன்றவற்றை தேய்த்து குளித்தப்பின்னர் ரோம வறட்சி அதிகரித்துவிடும். ரோம வறட்சி அதிகமாகும் பொழுது முடிகளின் நுனியும் வெடித்து காணப்படும். பூஞ்சைக்கிருமிகளும் இதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. ரோமத்தை எப்பொழுதும் மினுமினுப்புடன் வறட்சியின்றி வைத்துக் கொள்ள வெள்ளகரிசாலை இலைகள், பிரம்மிக்கீரை, மருதாணி, பெரிய நெல்லிக்காயின் வற்றல், கடுக்காய் தோல், தான்றிக்காய்தோல். அதிமதுரம் ஆகியவற்றை நன்கு அரைத்து, அத்துடன் இரண்டு பங்கு சீயக்காய்த்தூள் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். சோறு வடித்த கஞ்சியுடன் அவ்வப்போது இதனை கலந்து தலையில் தேய்த்து வரலாம். இந்த கலவையிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் நிறமிகள் ரோமத்தை பாதுகாக்கின்றன. ரோமக்கால்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள சருமத்தின் பி.எச். விகிதத்தை சமப்படுத்துகின்றன. மேலும் இவற்றில் அடங்கியுள்ள டிரைஎத்தனாலமின், சப்போனின்கள் ரோமக்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்கின்றன. வேதிப்பொருட்களாலான ஷாம்புகளை தவிர்த்து இயற்கை மூலிகை கலவைகளை பயன்படுத்தலாமே.



எனது சருமம் அதிகம் எண்ணெய் பசையுடன் காணப்படுகிறது. இதனால் எனது முகத்தில் விரைவில் பருக்கள் மற்றும் கொழுப்பு கட்டிகள் போன்று தோன்றுகின்றன. இது எண்ணெய் சருமம் உள்ளதால் இவ்வாறு ஏற்படுகிறதா?

கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், முகம் கழுவாமல் இருப்பதாலும், எண்ணெய்பசை அதிகம் ஏற்படுகிறது. நார்ச்சத்து அதிகமுள்ள கீரைகள், பழங்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும். வெள்ளரிப்பிஞ்சை அரிந்து, அதன் சாற்றை பஞ்சில் தொட்டு முகத்தில் தேய்க்கலாம். இதனால் எண்ணெய்பசை குறைந்து முகப்பருக்கள் மறையும், துளசி இலை, வேப்பிலை, மஞ்சள் மற்றும் ஆவாரம் பூவை நீரில் கொதிக்கவைத்து முகத்தில் படும்படி ஆவி பிடிக்கலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us