மூலிகை மருத்துவம் வருது... வருது...! விலகு... விலகு...!
மூலிகை மருத்துவம் வருது... வருது...! விலகு... விலகு...!
PUBLISHED ON : ஜூலை 31, 2011
நமது உணவுப்பாதையில் ஏராளமான நுண்கிருமிகள் உள்ளன. இவை பெரும்பாலும் நமக்கு நன்மை செய்வதாகவே உள்ளன. ஏனெனில் நாம் உண்ணும் உணவை புளிக்கவைத்து, உடைத்து, வினையூக்கிகளுடன் சேர்த்து குளூக்கோசாகவோ, புரதமாகவோ, கொழுப்பாகவோ மாற்றுவதற்கு நுண்கிருமிகளின் பங்கு அவசியம். பெருங்குடலில் சக்கையாக வெளியேறும் உணவு, நுண்கிருமிகளின் ஆதிக்கத்தால்தான் மலமாக மாற்றப்படுகிறது.
இயற்கையாகவே நமது உடலில் காணப்படும் இந்த நுண்கிருமிகள் நமது உடலுக்கு சம்பந்தமில்லாத, பிற நுண்கிருமிகள் நமது உடலுக்குள் நுழைவதை தடுத்துவிடுகின்றன. அவ்வாறு நுழைந்தாலும் நன்மை செய்யும் இந்த நுண்கிருமிகள் பல்கி, பெருகி, வேண்டாத நுண்கிருமிகளை அழித்துவிடுகின்றன. நாம் அடிக்கடி கிருமித்தொற்று ஏற்பட்ட அல்லது கெட்டுப்போன உணவுகளை உண்பதால் இந்த நன்மை செய்யும் கிருமிகள் அழிவதுடன், தங்கள் வாழ்விடத்தை விட்டு வேறு, வேறு உறுப்புகளுக்கு செல்லத் தொடங்குகின்றன. இதனால் நமது உடலின் இயல்பான செயல்பாடு பாதிக்கப்படுகிறது.
உணவு மாறுபாட்டால் உணவுகளை செரிக்கச் செய்யும் நுண்கிருமிகளின் தன்மை குறையும்பொழுது மலச்சிக்கல், கழிச்சல், வயிற்றுவலி, குமட்டல், வாந்தி மற்றும் வாய் துர்நாற்றம் உண்டாகிறது. வாய் துர்நாற்றத்தால் ஒருவரையும் அருகில் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை உண்டாகும்.
வாயை சுத்தமில்லாமல் வைத்திருப்பதாலும், வெங்காயம், பூண்டு, தேங்காய் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு, வாயை நன்கு கழுவாமல் இருப்பதாலும், பல்லிலும் ஈறிலும் சீழ்பிடித்த புண்கள் இருப்பதாலும் நாட்பட்ட சைனஸ் தொல்லையாலும் மலச்சிக்கலினாலும் வாய் துர்நாற்றம் உண்டாகும். நுரையீரலில் சீழ் கட்டிகள் காணப்படுதல், நுரையீரலில் ரத்தக்கசிவு, பல், ஈறு மற்றும் இரைப்பையில் ரத்தக்கசிவு ஏற்படுதல் ஆகியவற்றின் தீவிர நிலையிலும் வாய் துர்நாற்றம் உண்டாகும். ஆக்சிஜன் இல்லாத சூழ்நிலையிலும் வளரக்கூடிய பாக்டீரியாக்கள் வாய், பல் இடுக்கு, பற்குழி, ஈறு, தொண்டையின் உட்புறம், காது மற்றும் மூக்கின் உட்புறம் ஆகியவற்றில் பல்கி பெருகி வளர்வதே பெரும்பாலும் வாய் துர்நாற்றத்திற்கு காரணமாகும்.
வாயை நன்கு உப்பு கரைத்த நீரில் கொப்புளித்து சுத்தமாக வைத்திருப்பதும், பற்குழிகளை பல் மருத்துவரிடம் சென்று அடைத்துக்கொள்வதும், தினமும் இரண்டுமுறை பல் துலக்குவதும் நுண்கிருமிகளின் வளர்ச்சியையும் வாய் துர்நாற்றத்தையும் தவிர்க்க உதவும்.
பல்வேறு வகையான நுண் கிருமிகளால் தோன்றும் வாய் துர்நாற்றத்தை நீக்கி, ஈறுகளில் ஏற்படும் வீக்கம், பற்குழிகளில் தோன்றும் சீழ் கட்டிகள், தொண்டைப்புண்கள், நாக்கு மற்றும் தொண்டையின் உட்புறம் வளரும் நுண்கிருமிகளின் வளர்ச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை ஸ்பியர்மின்ட் மென்தா ஸ்பிக்கேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த தோட்டப் பயிர்களான இந்த செடிகளின் இலைகள் மிகுந்த நறுமணத்தை உடையவை. இவற்றின் இலைகளிலுள்ள கார்மோன், லிமோனின் என்னும் நறுமண எண்ணெய்கள், டையோசிஸ்மின், டையோஸ்மெடின் போன்ற பயோபிளேவனாய்டுகள், ரோஸ்மெரிக் அமிலம் போன்ற ஆவியாகக்கூடிய மருந்துச் சத்துக்கள் மூச்சுப்பாதை, உணவுப்பாதை போன்றவற்றில் ஏற்படும் தேவையற்ற நுண்கிருமிகளை கட்டுப்படுத்தி, புண்களை ஆற்றி, மூச்சுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. இந்த இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஸ்பியர்மின்ட் என்ற பெயரில் வாசனை திரவியங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் கிடைக்கின்றன.
ஸ்பியர்மின்ட் இலைகள் -10, துளசி இலைகள்-10 ஆகியவற்றை நீரில் போட்டு மூடி கொதிக்கவைத்து 10 நிமிடம் கழித்து வடிகட்டி, வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும். நாம் அன்றாடம் பல் துலக்கும் பற்பசை அல்லது பற்பொடியுடன் அரை துளி ஸ்பியர்மின்ட் எண்ணெய் கலந்து பல்துலக்கலாம்.
சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் பிப்ரஷ் என்னும் வாய் கொப்புளிக்கும் திரவ மருந்தில் ஸ்பியர்மின்ட் ஆயில் சேர்க்கப்படுகிறது. இதனை 10மி.லி., எடுத்து காலை மற்றும் இரவு படுப்பதற்கு முன் பல் ஈறுகளில் நன்கு தேய்த்து, அரை நிமிடம் வைத்திருந்து பின் வாய் கொப்புளித்துவர வாய் துர்நாற்றம் நீங்கும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,
மதுரை. 98421 67567.
எனக்கு குறுக்குவலி உள்ளது. இதனால் என்னால் அதிகநேரம் ஒரே இடத்தில் நிற்க முடியவில்லை. இதற்கு என்ன செய்வது?
குனிந்தவாறே பணிபுரிவதாலும், தண்டுவட பிரச்னைகளாலும், கால் வளைவினாலும் குறுக்கில் வலி ஏற்படலாம். இதற்கு இடுப்புப் பகுதிகளுக்கான பயிற்சிகளை முறையாக செய்வதுடன் உளுந்து தைலம், மகாமாசத்தைலம் போன்றவற்றை தடவி, ஒற்றடமிடலாம்.
இனிப்பு சுவையானது கபம் என்னும் ஐயத்தை அதிகப்படுத்துவதாக சித்தமருத்துவம் குறிப்பிடுகிறது. கபத்தை வளர்க்கும் உணவுகள் யாவும் இரைப்பை நோய்க்கு மனிதனை அழைத்துச் செல்லும் உணவுகளாகும். இதைத்தான் சித்தர்களும் சேட்பசீதமாய் துடைத்து என்று குறிப்பிட்டுள்ளனர். கப உணவுகளை அதிகமாக உண்ணுவதால் உடலின் ஐயக்குற்றம் கேடடைந்து, மதுமேகம் உண்டாகிறது. அந்த மதுமேக நோயில் வளி என்னும் தோடம் பாதிக்கப்படுவதால் நோயாளி உடல் மெலிந்து, சதை வற்றி, எலும்பும் தோலுமாய் ரத்தம் உற்பத்தி குறைந்து, ஏழு உடற்தாதுகளும் கெட்டு காணப்படுவர். இவர்களுக்கு சிகிச்சை பலனளிக்காது. மேலும் அழல் என்னும் தோடம் பாதிக்கப்படுவதால் அடிக்கடி பல நிறங்களில் சிறுநீர் செல்வதுடன், உடல் வறண்டு, வியர்வை பெருகி, அத்தியாவசிய உறுப்புகள்
பாதிக்கப்படும். இறுதியாக ஐயம் என்னும் தோடம் பாதிக்கப்படுவதால் உடல் வலிமை குறைந்து, பருத்து, மூச்சு திணறி, வியர்த்து காணப்படுவர். கேடடைந்த தோடங்களின் அடிப்படையில் சிகிச்சையளித்தால் மதுமேகம் என்னும் சர்க்கரை நோய் எளிதாக கட்டுப்படுவதுடன், குணமடையவும் வாய்ப்புண்டு என்று சித்த மருத்துவம் தெளிவாக குறிப்பிடுகிறது.
