PUBLISHED ON : அக் 29, 2023

தேன் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை சிங்கப்பூர் தேசிய நுாலகத்தில் படித்தேன். இயற்கை நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் கலந்த வரம் தேன். 8,000 ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவ ரீதியில் தேனின் பயன்பாடு இருக்கிறது. நுண் கிருமிகளை எதிர்த்து போராடும் இதன் வீரியம், ஆன்டிபயாடிக் மருந்துகளையே பின்னுக்கு தள்ளியதும் உண்டு.
தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தும் போது, அவற்றை எதிர்த்து போராடும் திறனை பாக்டீரியாக்கள் பெற்று விடுகின்றன என்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால், இத்தனை ஆண்டுகளில் தேனின் வீரியத்திற்கு எதிராக அவற்றால் எதுவும் செய்ய முடிந்ததில்லை.
பல தோல் நோய்களுக்கும், காயம்பட்ட இடத்தில் நோய் தொற்றை தடுப்பதற்கும், விரைவாக புண்களை ஆற்றுவதற்கும் தேன் பல காலமாக பயன்பட்டு இருக்கிறது. காயம், புண் ஏற்பட்ட இடத்தில் நுண் கிருமிகள் வளர்ந்து பெருகுவதை தேன் தடுக்கிறது. மருத்துவ ரீதியில் தோல் நோய், தீக்காயம், சோரியாசிஸ், அரிப்பு, பல வகையான புண்கள், சர்க்கரை கோளாறால் ஏற்படும் பாத புண்கள், அறுவை சிகிச்சைக்கு பின் தோலில் ஏற்படும் தழும்புகளை ஆற்றுவது என்று பல வகையிலும் தேன் பயன்படுத்தப்படுகிறது.
தேனை உற்பத்தி செய்யும் மலர்களிலும், தேனீக்களின் உடலில் சுரக்கும் திரவத்திலும், பாக்டீரியா தொற்றுக்கு எதிரான இயற்கையான வேதிப் பொருள் உள்ளது. சில வகையான வேதிப் பொருட்கள், தேனை தேன் கூட்டில் சேகரித்து அவற்றை பயன்பாட்டிற்கு தகுந்ததாக மாற்றும் வேதியியல் செயல்முறைகளின் போதும் உருவாகிறது. இயற்கையிலான இனிப்பு சுவை 85 சதவீதம் நிறைந்த தேன், அதிக அளவில் காரத்தன்மையும், நீர் மூலக்கூறுகளையும் கொண்டது. தேன் தடவிய இடத்தில் உள்ள நுண் கிருமிகள் விரைவாக நீர்ச்சத்தை இழப்பதால், அவற்றால் அதிக நேரம் உயிர் வாழ முடியாது.
மலர்களில் இருந்து தேனை சேகரித்து பதப்படுத்தும் போது, தேனீக்கள் தங்கள் உடலில் இருந்து, 'டெபென்சின் - 1' என்ற பாக்டீரியாவை அழிக்கும் வேதிப் பொருளையும், பிற நுண்ணுயிரிகளை அழிக்கும், 'எம்.ஜி.ஓ., - மெத்திகிளையோக்சா - 1' என்ற வேதிப் பொருளையும் உற்பத்தி செய்கிறது.
கொரோனா வைரசை எதிர்த்து அழித்ததற்கான பல மருத்துவ ஆய்வுகள் உள்ளன. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களைத் துாண்டி, புதிய செல்களை உருவாக்க தேன் உதவுகிறது. கிருமிகளால் ஏற்படும் நச்சுத் தன்மையை வெளியேற்றவும் செய்யும்.
செரிமான மண்டலத்தில் ஏற்படும் அழற்சியை குறைக்கிறது. பெருங்குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாவதற்கும், வாய் புண், ஹெச் பைலோரி பாக்டீரியாவால் ஏற்படும் இரைப்பை புண், மலச்சிக்கல் போன்ற பலவற்றையும் சரி செய்யும் திறன் தேனுக்கு உள்ளது. பசியைத் துாண்டும் 'கிரெலின்' ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். நல்ல துாக்கத்தைத் தரும் 'மெலடோனின்' ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும்.
கெட்ட கொழுப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பது, கேன்சர் செல் வளராமல் தடுப்பது, ரத்த சர்க்கரை அளவை சீராக்குவது என்று பல வியப்பான பலன்கள் இருந்தாலும், வெகு அபூர்வமாக சிலருக்கு தேன் சாப்பிடுவதால், ஆஸ்துமாவை அதிகரிக்கச் செய்யலாம். வயிற்றுப்போக்கு, தலை சுற்றல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பை எற்படுத்தலாம் என்றும் ஆய்வில் தெரிகிறது. தினமும் 15 - 30 மில்லி தேன் சாப்பிடலாம்.
டாக்டர் நாகேந்திரன் தினகரன்,
முன்னாள் பேராசிரியர், ஜீரண மண்டல பிரிவு,
அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனை, சென்னை
