PUBLISHED ON : டிச 12, 2021

முட்டைக் கோஸ் சாப்பிட்டால் வயிறு உப்புசமாகி விடுவதாக சிலர் சொல்வார்கள். உண்மையில், அதில் உள்ள 'ஹைட்ரஜன் சல்பைடு' உடம்புக்கு மிகவும் நல்லது. ஆனால், நன்கு வேக வைத்தே சாப்பிட வேண்டும். பச்சையாகவோ, அரை வேக்காடாகவோ சாப்பிட்டால், அதிகப்படியான சல்பர், ஒத்துக் கொள்ளாது.
வேறு சிலருக்கு துவரம் பருப்பு, பால் பொருட்கள் சாப்பிட்டால் செரிமானம் ஆகாது; மாவு சத்து அதிகம் உள்ள உணவு, பால் பொருட்களை சேர்ப்பதால், வாயுத் தொல்லை ஏற்படும். உடல் எடையை குறைக்க ஆலோசனை கூறும் போது, மாவுச் சத்து, கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை குறைத்து சாப்பிட வேண்டும்.
அப்போது தான் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு கரைந்து, உடல் எடை குறையும்; ரத்த சர்க்கரை கட்டுக்குள் வரும். அத்துடன், வாயுத் தொல்லையும் குறையும். இட்லி, சாதம், சிறு தானியம் உட்பட கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளவற்றை, எந்த அளவு குறைத்து சாப்பிடுகிறோமோ, அந்த அளவு நல்லது. நம் வயிற்றுக்கு எது ஒத்துக் கொள்ளாது என்று பார்த்து அதை தவிர்க்க வேண்டும்.
எதனால் இப்படி?
உடலின் உள்ளே 'மைக்ரோபியம்' என்ற பாக்டீரியா நுண்ணுயிரி உள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. இது தனி நபரின் உடல் தன்மையைப் பொருத்தது. எப்படி ஒவ்வொருவருக்கும் கை ரேகை பிரத்யேகமாக உள்ளதோ, அதே போன்று பாக்டீரியாவும் தனித் தன்மை வாய்ந்தது.
அதிலும், உடம்பின் எல்லாப் பகுதியிலும் இந்த நுண்ணு உயிரி இருந்தாலும், ஒரு பாகத்தில் இருப்பதைப் போன்று மற்றதில் இருப்பது இல்லை. நம் வலது கை உள்ளங்கையில் இருக்கும் பாக்டீரியாவும் இடது உள்ளங்கையில் இருக்கும் பாக்டீரியாவும் வெவ்வேறாக இருக்கும்.
சிறுநீரக பாதையில் வேறு வகை. செரிமான மண்டலத்தில் உள்ள பாக்டீரியாவால் நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்ய முடியாவிட்டால், நிறைய வாயு உற்பத்தி ஆகும். நம் உடம்பை நாம் தான் புரிந்து அதற்கேற்ப நம் உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
டாக்டர் ஜெயஸ்ரீ கோபால்,
நாளமில்லா சுரப்பிகள் மற்றும் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர், சென்னை
98846 24613, 98412 95644
