PUBLISHED ON : மார் 26, 2017

நம் உடலில் ஏற்பட உள்ள, சில மாற்றங்களை அறிகுறிகளின் மூலம் எளிதில் அறிய முடியும்.
கண்கள் உப்பியிருந்தால் சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதை குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையை செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர், வெளியேற முடியாமல் போகும்.
இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால், கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான நீர் அருந்துவது, சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
கண் இமைகளில் வலி: அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மக்னீசியம் உடலில் குறைவதால், உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது. போதுமான அளவு, ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை, அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் அதிக வெளிச்சம்: அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பதால் ஏற்படும், மனஅழுத்தம் காரணமாக, மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நம் பார்வைக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் தெரிகிறது.
எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
கண்கள் உலர்ந்து போவது: நாம் ஏசி அதிகமுள்ள இடங்களில், அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும், கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. குறைந்தது எட்டு மணி நேர, இரவுத் தூக்கம் அவசியம். தினமும் கண்களை மேலும்கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை, ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்: இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக, இது காதுகளுக்கு பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால், உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே, இன்னும் புரியவில்லை என்கிறார்கள். அதிகப்படியான மன அழுத்தம், ஹார்ட்அட்டாக் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல், லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்னைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதை தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது: இப்படி ஏற்படும்போது உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது.
போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாக தெரியும். ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால், தண்ணீர் அருந்த வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
தோல் இளம் மஞ்சளாக மாறுவது: கல்லீரல் பாதிப்படையும்போது, உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால், இப்படி கல்லீரல் பிரச்னை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

