PUBLISHED ON : மார் 26, 2017

'குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, என்னென்ன வகை பழங்கள் கொடுக்க வேண்டும்' என்று, ஊட்டச்சத்து நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, மாதுளை போன்ற பழங்களை தான் அதிகமாக வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். இது தவிர, பப்பாளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, கமலா, ஆரஞ்சு என புளிப்புத்தன்மையுடைய பழங்களையும் கொடுக்க வேண்டும். இதில் வைட்டமின் 'சி' அதிகளவில் இருப்பதால், உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும். பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களைத் தடுக்கும்.
வளரும் குழந்தைகளுக்கு முட்டை மிக முக்கியமான உணவு. முட்டையில் அதிகளவில் புரதங்கள் அடங்கியிருப்பதால் உடல் உறுப்புகள் வளரவும், திசுக்களை சீரமைக்கவும் உதவும். எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும் வைட்டமின் 'டி', வேகவைத்த முட்டையில் அதிகளவு உள்ளது.
வளரும் குழந்தைகளுக்கு தினமும், அல்லது வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது கீரை கொடுப்பது நல்லது. கீரையில் அதிகளவு இரும்புச் சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள் உள்ளன. இதனால், ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பீட்ரூட், கத்தரிக்காய் போன்ற அடர் நிறம் உள்ள காய்கறிகள், கேரட், மஞ்சள் மற்றும் பச்சை குடைமிளகாய், மஞ்சள்பூசணி போன்றவை, பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் காளான் மிக நல்லது.
மழைக்காலத்தில் இந்த காய்கறிகளை சூப் வைத்து காலையில் அல்லது மாலையில் கொடுக்கலாம்.
அசைவம் சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டன், எலும்பு சூப் சிறந்தது.
தயிர் சாப்பிடுவதால், ஆன்டி பாக்டீரியாக்கள், கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களை வரவிடாமல் தடுக்கும். தயிர் பிடிக்காத குழந்தைகளுக்கு மோர் கொடுக்கலாம். பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, பேரிச்சை போன்ற உலர் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்துவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி சீராக அதிகரிக்கும். இவற்றில் அதிகளவில் புரோட்டீன்கள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
குழந்தைகள் உணவில் அடிக்கடி மீன் சேர்க்க வேண்டும். புரோட்டீன் அதிகம் உள்ள மீனில், 'ஒமேகா 3' என்ற ஒரு வகை அமிலம் உள்ளது.
இது, உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க உதவுவதுடன், கண்பார்வை குறைபாட்டைத் தவிர்த்து மூளைவளர்ச்சிக்கு உதவும். அதனால், வாரத்தில் ஒரு முறையாவது குழந்தைகளுக்கு மீன் கொடுப்பது நல்லது.
கம்பு, சோளம், கோதுமை, ராகி, கேள்வரகு போன்ற தானியவகைகளை எல்லாம் கலந்து பொடிசெய்து, கஞ்சி அல்லது ரொட்டியாக கொடுக்கலாம்.
இவற்றில் இருக்கும் அதிகளவு நார்ச்சத்து உடலைத் தொற்றுகளில் இருந்து காக்கும்.

