PUBLISHED ON : மார் 26, 2017

இன்றைய நவீன காலத்தில், உணவின் வகையும், பெயர்களும் ஏராளம் உள்ளன. எத்தனை வகையில் உணவுகள் தயாரித்தாலும், அது அறுசுவைக்குள்தான் இருக்கும் என்பது முன்னோர்களின் கணிப்பு. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப்
பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.
உடலை இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப்பயன்படுகின்றன. ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனதே நம் உடல். இந்த தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.
துவர்ப்பு, ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு, தசை வளர்க்கிறது. புளிப்பு, கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு, எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு, நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு, உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.
துவர்ப்பு: உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை. இவற்றை விரும்பி சாப்பிடலாம்.
இனிப்பு: மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, @கரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற வை இனிப்புச் சுவைக்கு ஏற்ற உணவுகளாகும்.
புளிப்பு: உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி,
மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்ட உணவுகள்.
காரம்: பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவையாகும்.
கசப்பு: பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.
உவர்ப்பு: அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.
இலையில் உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின் இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

