PUBLISHED ON : ஜூன் 19, 2022

சாக்லேட் சாப்பிடுவதால் பல் சொத்தை ஏற்படும் என்பதைப் போன்றே, நீண்ட நாட்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதால், குழந்தையின் பல் சொத்தையாகி விடும் என்ற தவறான கருத்து உள்ளது.
தொழில் புரட்சி நடப்பதற்கு முன் இருந்த மனிதர்களின் எலும்புக் கூட்டை எடுத்துப் பார்த்தால், அவர்களின் தாடை எலும்புகளில் பற்கள் சிதையாமல் அப்படியே இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட உணவுகளின் பயன்பாடு வந்த பிறகே, பற்களில் பல் சொத்தை, பல் சிதைவு போன்ற பிரச்னைகளே வந்தன.
பல் சொத்தை வருவதற்கு இரண்டு பிரதான காரணிகள் உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட உணவு, மற்றொன்று நீண்ட நேரம் உணவை வாயில் வைத்திருப்பது.
மொபைல் போனில் விளையாட்டு, 'டிவி' பார்த்தபடி குழந்தைக்கு சோறு ஊட்டுவது தான் இன்றைய பழக்கம். குழந்தைகள் ஒரு வாய் உணவை வாங்கி, வாயில் அடக்கியபடி, 'டிவி' பார்க்கின்றனர். ஒரு இட்லி சாப்பிட ஒரு மணி நேரம் ஆகிறது.
இட்லி, தோசை, சாதம் என்று கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு, நீண்ட நேரம் வாயில் இருந்தால், சாக்லேட் சாப்பிடுவதால் எந்த அளவு பல் சொத்தை வருகிறதோ, அதைக் காட்டிலும் அதிகமாக ஆபத்தை ஏற்படுத்துவதோடு, நாக்கின் இயல்பான செயல்பாட்டையும் பாதிக்கும்.
'பேஸ்ட், பிரஷ்' வைத்து வாய், பற்களை சுத்தம் செய்தாலும், நாக்கை வைத்து வாய் முழுதும் சுத்தம் செய்வது என்பது இயல்பாக நடக்கக் கூடிய செயல். பல்லுக்கும், கன்னத்திற்கும் இடையில் உணவை தேக்கி, ஊற வைத்து சாப்பிட்டால், நாக்கின் செயல்பாடு முழுதும் பாதிக்கப்படுகிறது; இது மிகவும் ஆபத்து. சாக்லேட் சாப்பிடுவதால் பல் சொத்தை ஏற்படுவது, 5 சதவீதம் மட்டுமே. வாயில் உணவை அதிக நேரம் வைத்திருப்பதால் தான், 90 சதவீதம் பல் சொத்தை வருகிறது.
தாய்ப்பால்
பல் சொத்தை வராமல் தடுக்கும் முதல் வழி, தாய்ப்பால். தாய்ப்பால் குடிக்கும் போது, மேல் தாடையை நோக்கி நாக்கு தள்ளி, குழந்தை பால் குடிக்கும். பாட்டிலில் பால் கொடுப்பதால், நாக்கு கீழ் தாடை நோக்கி தள்ளி விடும்; இது, நாக்கின் இயல்பான செயலில் பலவீனப்படுத்தும். சுத்திகரிக்கப்பட்ட உணவை தவிர்ப்பது அடுத்த வழி.
இது போன்ற உணவை சாப்பிடும் போது, தாடையும் குறுகலாகும். தெற்றுப் பல், வரிசை தவறி பல் வளர்வது, பல் வரிசை சீராக இல்லாமல் கோணலாக வளர்வது, ஒன்றுக்கு ஒன்று வளர்வது போன்ற பிரச்னைகளும் வரும். தெற்றுப் பல் இருந்தால், மூச்சுக் குழாயை குறுகச் செய்து, வாய் வழியே மூச்சு விட வேண்டியிருக்கும்.
இயல்பாக மூக்கில் சுரக்கும் நைட்ரிக் ஆக்சைடு, காற்றின் வழியே உள்ளே செல்லும் கிருமிகளை அழித்து, பாதுகாப்பு தரும். வாய் வழியே மூச்சு விடும் போது, கிருமிகள் உள்ளே செல்வதால், குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற தொற்று வியாதிகள் வருகின்றன.
டாக்டர் ஷீபா சம்சுதீன்
பல் மருத்துவர், சென்னை
97869 29892
