நோய் எதிர்ப்பு சக்தி! - தேங்காய்க்கு இணையான உணவு இல்லை!
நோய் எதிர்ப்பு சக்தி! - தேங்காய்க்கு இணையான உணவு இல்லை!
PUBLISHED ON : டிச 27, 2020

மிளகு, இஞ்சி, சுக்கு, மஞ்சள் இவற்றை தினமும் சமையலில் பயன்படுத்துகிறோம். இவற்றில் இயற்கையாகவே உள்ள வேதிப் பொருட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, கேன்சர் உட்பட பல நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும் கொண்டது.
காலையில் வெறும் வயிற்றில், பல் துலக்கிய பின், நான்கைந்து துளசி இலைகளை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதில் துளசி இலைகளை போட்டு, நாள் முழுதும் அந்த நீரை குடித்தாலும் நல்ல பலன் தரும்.
தேங்காய் எண்ணெய்
சமையலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது கெடுதல் என்ற தவறான அபிப்ராயம் உள்ளது. தேங்காய் பால், தேங்காய் எண்ணெயை விட சிறந்த உணவு இருக்க முடியாது. நோய் எதிர்ப்பு சக்தி இதில் அதிகம் உள்ளது. தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெயை அதிகம் சூடுபடுத்தக் கூடாது. அதனால், செக்கில் ஆட்டிய எண்ணெயை பயன்படுத்தலாம்.
சுத்திகரிக்கப்பட்டதாக, அதிக சூடுபடுத்தி தயாரித்த எண்ணெயாக இருக்கக் கூடாது. தினமும் உணவில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்தால், படிப்படியாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தேங்காய் துருவல், தேங்காய் பால் போன்றவற்றை எந்த அளவு குறைவான வெப்பநிலையில் சமைக்கிறோமோ, அந்த அளவு இதில் உள்ள வேதி அமிலம் சிதையாமல் முழுமையாக நமக்கு கிடைக்கும்.
இயற்கையாகவே, மோனோலாரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது. தாய்ப்பால், தேங்காய் தவிர வேறு எதிலும் இந்த அமிலம் கிடையாது. இது, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.
துாக்கம்
இன்றைய வாழ்க்கை சூழலில், 6 - 7 மணி நேரம் துாங்குவதே பெரிய விஷயமாக இருப்பதாக நினைக்கிறோம். இந்த நேரம் போதாது.
சராசரியாக எட்டு மணி நேரம் துாங்கினால் மட்டுமே, உடம்பு அதனுடைய வேலைகளை செய்து கொள்வதற்கும், தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும், தன்னைத் தானே புதுப்பித்து கொள்ள முடியும்.
ஐம்பது வயதிற்கு மேல், 8 - 10 மணி நேரம் துாங்கினால் மட்டுமே நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். இதை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
தோப்புக்கரணம்
துாக்கத்திற்கு அடுத்த அவசியமான தேவை உடற்பயிற்சி. சத்தாக சாப்பிட்டு, 10 மணி நேரம் துாங்கினாலும், உடற்பயிற்சி செய்யாவிட்டால் பலன் இல்லை.
எந்த உடற்பயிற்சியும் செய்ய நேரம் இல்லை என்று சொல்பவர்கள், தினமும் காலையில் எழுந்ததும், வலது கையால் இடது காது நுனியையும், இடது கையால் வலது காது நுனியையும் இறுக்கப் பிடித்து, 25 முறை தோப்புக்கரணம் போடலாம்.
இதுவே சிறந்த உடற்பயிற்சி. இது மூளையையும், உடலையும் சேர்த்து துாண்டிவிட்டு, நோய் எதிர்ப்பு திறனுக்கான வேலையைச் செய்யத் துவங்கும்.
டாக்டர் ஜி.சதீஷ்குமார்,
சித்த மருத்துவர்,
சென்னை.
90920 85847, 98400 25847

